துபாய்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் தான் எக்ஸ் ஃபேக்டர் என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
மகளிருக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. மாலை 7.30 மணிக்கு தொடங்கவுள்ள போட்டி என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் இதுவரை இந்திய மகளிர் அணி இதுவரை எந்த ஐசிசி தொடரையும் கைப்பற்றியதில்லை.

ஆனால் இம்முறை ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்புடன் தீவிரமாக உள்ளனர். அதற்கேற்ப ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமீமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயாங்கா பாட்டீல் உள்ளிட்ட பலரையும் தயார் செய்துள்ளனர். இந்த நிலையில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீராங்கனை குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரீசாந்த் பேசுகையில், இந்திய அணி நல்ல கலவையான வீராங்கனைகளுடன் அமைந்துள்ளது. எக்ஸ் ஃபேக்டர் வீராங்கனை என்று கேட்டால், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரே எக்ஸ் ஃபேக்டர் தான். அவர் மீண்டும் 2017 உலகக்கோப்பை அரையிறுதி போல் ஒரு இன்னிங்ஸை ஆடுவார் என்று நினைக்கிறேன். அவர் நிச்சயம் முக்கியமான போட்டியில் மேஜிக்கை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.
அதேபோல் இளம் வீராங்கனையான ஜெமீமா ரோட்ரிக்ஸ் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஆனால் எக்ஸ் ஃபேக்டர் என்றால், அது ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் தான். இந்திய மகளிர் அணிக்கு எந்த அட்வைஸையும் அளிக்க விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் பயிற்சியிலும், தயாராவதிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது தான் ஒரேயொரு ஆசை.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வெல்வோம் என்ற காட்சியை மனதில் கொண்டு வந்து போராடினால், யாராலும் நம்மை வீழ்த்த முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால், இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஸ்பின்னர்களுக்கு பிட்ச் கூடுதல் உதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.