அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி தோல்வி அடைந்த நிலையில், இந்தப் போட்டி துவங்கிய உடனேயே நியூசிலாந்து அணி தோல்வி அடைந்து விட்டதாக சவுரவ் கங்குலி குறிப்பிட்டு இருக்கிறார். நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் எடுத்த டாஸ் முடிவு தவறு என கங்குலி விமர்சனம் செய்துள்ளார்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்டிங் வலுவானது என தெரிந்தும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யாமல் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீர்ரகள் சஞ்சு சாம்சன் 89 ரன்களும், இஷான் கிஷன் 54 ரன்களும், அபிஷேக் சர்மா 52 ரன்களும் விளாசி நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை சேர்த்தது. அதன் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து கோப்பையை பரிதாபமாக கோட்டைவிட்டது.
நியூசிலாந்து அணியின் இந்த முடிவு குறித்துப் பேசியுள்ள சவுரவ் கங்குலி, இந்த இந்திய அணியை யாராவது முதலில் பேட்டிங் செய்யச் சொல்வார்களா என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். "மாலை 7 மணிக்கு ஆட்டம் தொடங்கியது, ஆனால் 7:30 மணிக்கே போட்டி முடிந்துவிட்டது. நியூசிலாந்து அப்போதே உலகக்கோப்பையை இழந்துவிட்டது. இஷான், அபிஷேக், சஞ்சு, சூர்யகுமார், சிவம் துபே, திலக் வர்மா, ஹர்திக் மற்றும் அக்சர் படேல் என மிக நீண்ட பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைப்பது விபரீதமான செயல். போதாக்குறைக்கு பும்ரா என்ற ஒரு அசாத்திய மேஜிக் பந்துவீச்சாளரும் அணியில் இருக்கிறார்" என்று கங்குலி கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணியின் அசுர பலம் குறித்து வியந்து பேசிய அவர், ஆடும் லெவனில் இடம் பெறாத வீரர்களைப் பார்த்தாலே இந்தியாவின் உண்மையான வலிமை புரியும் என்றார். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கும் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி போன்ற மிகச்சிறந்த அதிரடி வீரர்கள் கூட தற்போது அணியில் இடம் கிடைக்காமல் வெளியே அமர்ந்துள்ளனர்.

திறமையான வீரர்களின் பட்டாளம் இந்தியாவில் நிரம்பி வழிகிறது. இதனை வைத்துக்கொண்டு இந்தியாவால் மிக எளிதாக சர்வதேச தரத்தில் இரண்டு வலிமையான அணிகளை உருவாக்க முடியும் என்றும் கங்குலி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.