விசாகப்பட்டினம்: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், சிவம் துபேவைத் தவிர மற்ற முன்னணி வீரர்கள் அனைவரும் ஏமாற்றம் அளித்தனர். குறிப்பாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை தனக்குக் கிடைத்த வாய்ப்பை வீணடித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடந்த இரண்டு தொடர்களில் சஞ்சு சாம்சன் வெளியே அமர வைக்கப்பட்ட நிலையில், இந்தத் தொடரில் சஞ்சு சாம்சனுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவர் அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறி வருகிறார். நேற்றைய போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விரைவாக வெளியேறிய நிலையில், சஞ்சு சாம்சன் அணியை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆரம்பத்தில் சில பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த அவர், நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்து, வர்ணனையாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தி அடைந்தார். சஞ்சு சாம்சனின் பேட்டிங் டெக்னிக்கில் உள்ள குறையை அவர் சுட்டிக்காட்டினார்.
"சஞ்சு சாம்சனிடம் கால்களுக்கான அசைவு சுத்தமாக இல்லை. அவர் ஒரே இடத்தில் நின்றுகொண்டு, பந்து திரும்புகிறதா என்பதைக் கூடக் கணிக்காமல் ஆடுகிறார். அவர் லெக் சைடில் நகர்ந்து, ஆஃப் சைடில் அடிக்க முயற்சிக்கிறார். ஆனால் கால்களை அதற்கேற்ப நகர்த்துவதில்லை" என்று கவாஸ்கர் குற்றம் சாட்டினார்.
ரீப்ளே காட்சிகளைப் பார்த்த பிறகு மேலும் விளக்கமளித்த கவாஸ்கர், "நான் முன்பே சொன்னது போல, அவர் தனது கால்களை நகர்த்தாமல் லெக் ஸ்டம்ப் திசையில் விலகி நிற்கிறார். இதன் மூலம் தனது மூன்று ஸ்டம்புகளையும் பந்துவீச்சாளருக்குத் திறந்து காட்டுகிறார். இப்படி விளையாடும்போது, பந்து பேட்டில் படவில்லை என்றால், அது நேராக ஸ்டம்பைத் தாக்கும். சஞ்சு சாம்சனுக்கு இதுதான் நடந்தது. அவர் தனது விக்கெட்டை அவரே தாரைவார்த்துவிட்டார்" என்று தொழில்நுட்ப ரீதியாக விளக்கினார்.
ஏற்கனவே மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷன் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் அதிரடியாக விளையாடி தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இந்நிலையில், சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பி வருவது அவருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை நெருங்கும் வேளையில், இது போன்ற அடிப்படைத் தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிட்டால் அணியில் இடம் கிடைப்பது கடினம்.