மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது.
கடந்த சில போட்டிகளாக சூரியகுமார் யாதவும் ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த நிலையில் தற்போது பேட்டிங்கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ், இவ்வளவு பெரிய இலக்கை நாம் நிர்ணயிக்கும் போது நிச்சயம் அது பௌலர்களுக்கு நல்ல விஷயமாக இருக்கும்.

ஏனென்றால் பனிப்பொழிவு இருக்கும்போது கூட, கூடுதலாக ரன்கள் சென்றாலும் பிரச்சனை இருக்காது. எனவே இது ஒரு நல்ல விஷயமாக நான் கருதுகின்றேன். பவர் பிளேவில் நாங்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடினோம். அதன் பிறகும் இவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்தது மகிழ்ச்சியான விஷயம்.
நாங்கள் 15 ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்றோம். அதன் பிறகு நாங்கள் எந்த ஒரு வீரரையும் பொறுமையாக விளையாடு என்று சொல்லவில்லை. தற்போது நாங்கள் களமிறங்கியுள்ள காம்பினேஷன் எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. இது சரியாக இருந்தது என்றால் அதையே நாங்கள் தொடர்வோம். நான் பேட்டிங் வரிசையில் இன்று நான்காவது வீரராக களம் இறங்கினேன். கொஞ்சம் நெருக்கடியான சூழலில் களமிறங்கினேன்.
இதுபோல சூழலில் நான் பல போட்டிகளில் விளையாடி இருக்கின்றேன். வலைப்பயிற்சியில் நான் நன்றாக தான் விளையாடி வருகின்றேன். இதனால் சில பந்துகளை எதிர்கொண்டால் நிச்சயம் ரன்கள் சேர்க்க முடியும் என்று எனக்கு கண்டிப்பாக தெரியும். நான் என்னுடைய அடையாளத்தை என்றுமே மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.
இயல்பாக வரும் விஷயத்தை ஏன் மாற்ற வேண்டும். நான் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக நல்ல பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். வலைப்பயிற்சியில் கூட சில ஷார்ட்டுகளை ஆடி முயற்சி செய்து பார்த்தேன். இன்று ஆடுகளத்தில் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. பில்டிங்கில் நாங்கள் சில கேட்ச்களை தவற விட்டோம். பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பந்தை பிடிப்பது கொஞ்சம் கடினம் தான்.
எனினும் அதிலும் நாங்கள் முன்னேற்றம் காண விரும்புகின்றோம். இதற்காக பில்டிங்கில் நாங்கள் தீவிர பயிற்சியில் இறங்கி இருக்கின்றோம். எங்கள் வீரர்கள் இன்று களத்தில் செயல்பட்ட முறை உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அபிஷேக் ஷர்மா எப்போதும் போல் நன்றாக விளையாடு இருக்கின்றார். அவர் களத்தில் விளையாடுவதை விட இந்த போட்டிக்காக அவர் எப்படி தயாராகி வருகிறார் என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
ஹோட்டலில் இருந்தாலும் சரி, அணியின் பேருந்தில் இருந்தாலும் சரி. அவர் சின்ன, சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருப்பார். எப்போதும் கிரிக்கெட் பற்றியை யோசித்து கொண்டு இருப்பார். அதுதான் களத்தில் தெரிகிறது. களத்திற்கு வெளியே அவர் போடும் உழைப்புதான் தற்போது அவருக்கு வெற்றியை தேடித் தருகிறது என்று சூரியகுமார் கூறினார்.