அகமதாபாத்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி இருக்கிறது. சொந்த மண்ணில் டி20 உலக கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சூரியகுமார் யாதவ் படைத்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இதுவரை எந்த அணியும் தொடர்ந்து இரண்டு முறை டி20 உலக கோப்பையை வென்றது கிடையாது. போட்டி முடிவடைந்த பிறகு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ், நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று உணர கொஞ்சம் நேரம் ஆகும் என்று நினைக்கின்றேன்.

ஆனால் உண்மையிலே நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். இது நீண்ட நெடிய பயணமாக இருந்தது. 2024 டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்த பயணம் தொடங்கியது ஜெய்ஷா, ரோகித் சர்மா ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பதவியை வழங்கினார்கள். அவர்கள் அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.

இரண்டு ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக உழைத்து தற்போது உலக கோப்பையை மீண்டும் வென்று இருக்கின்றோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகின்றோம். நல்ல கிரிக்கெட் தொடர்புடைய பழக்க வழக்கங்களை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றோம்.
நான் ஒவ்வொரு வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். வீரர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய திறமை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும். எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர் இருக்கின்றார்கள். சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள்.
அதுவும் இறுதிப்போட்டியில் ரன்கள் சேர்த்திருப்பது உண்மையிலே ஸ்பெஷலான ஒரு விஷயம். பும்ரா ஒரு தலைமுறையின் கிடைக்கும் ஒரு வீரர். நான் எப்போதுமே அவரை இந்த தேசத்தின் சொத்து என்று தான் கூறுவேன். முக்கியமான ஆட்டங்களில் எவ்வாறு பந்து வீச வேண்டும். எப்படி அணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்பதில் அவர் கைதேர்ந்தவர். எங்கள் அணியில் இரண்டு உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும். இதுதான் என்னுடைய வெற்றிக்கான ரகசியம் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.