திருவனந்தபுரம்: இந்தியா. நியூசிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
272 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இத்தொடர் வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், "இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

"இந்த ஆண்டு நாங்கள் நிறைய டி20 போட்டிகளில் விளையாடியுள்ளோம். டி20 உலகக் கோப்பை தற்போது நடைபெறவிருக்கிறது. இந்த தருணத்திற்காகத்தான் காத்திருந்தோம். கேப்டனாகவும் வீரராகவும் இத்தகைய தருணத்தை கனவு கண்டேன்," என்று யாதவ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கடந்த முறை அகமதாபாத்தில் முரளி கார்த்திக் தன்னோடு பேசியபோது, 'தான் களத்தில் இருந்தால் அஞ்சத் தேவையில்லை' என்று கூறியதை சூரியகுமார் யாதவ் நினைவு கூர்ந்தார். "கடந்த ஓராண்டாக நான் பல பயிற்சி விஷயங்களைச் செய்து வருகிறேன். எனது அன்றாட வழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன். ஃபார்மில் இருந்தாலும் ரன்கள் மட்டுமே வரவில்லை. ஆனால் இந்தத் தொடர் எனக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
"உலகக் கோப்பைக்கு முன் நல்ல ஃபார்மில் இருப்பது சிறப்பானது. கடந்த ஆண்டு முழுவதும் வானம் எனக்கு அவ்வளவு நீலமாக இல்லை. அதுதான் வாழ்க்கை; கிரிக்கெட் பயணத்தின் ஒரு பகுதி. இதை நான் பெருமையாகக் கருதுகிறேன்," என்று யாதவ் தெரிவித்தார்.
"இவையெல்லாம் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை. நான் அடிப்படை நுணுக்கங்களில் கவனம் செலுத்தினேன். பேட்டிங்கில் ஏற்பட்ட குறைகளைக் கண்டறிய நண்பர்களுடன் விவாதித்து, அவர்களது ஆலோசனைகளைப் பின்பற்றினேன். பல விளையாட்டு வீரர்களும் இதுபோன்ற சவால்களைச் சந்திப்பதாகவும், சரியானவற்றைத் தொடர்ந்து செய்தால் மீளலாம் என்றும் நம்பினேன்," என்று அவர் தெரிவித்தார்.
"தற்போது நான் மீண்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் நிச்சயமாக சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். எப்போதும் விளையாட்டிலிருந்து ஒரு விஷயத்தை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்," என்று யாதவ் கூறினார்.
"டி20 உலகக் கோப்பைக்கு முன் மும்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு பயிற்சி ஆட்டத்தில் களம் காணவுள்ளோம். கடந்த ஐந்து போட்டிகள் மற்றும் ஓராண்டுச் செயல்பாடுகளை மீளாய்வு செய்து, மேம்பட வேண்டிய பகுதிகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்," என்று யாதவ் குறிப்பிட்டார்.
டி20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக மாறியிருப்பதாக யாதவ் குறிப்பிட்டார். "இவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயிக்கும்போது எதிரணியும் அதிரடியாக ரன்கள் குவிக்கும் என எனக்குத் தெரியும். ஒரு கேப்டனாகவும், பந்துவீச்சாளர்களை வழிநடத்தும் நபராகவும் கடுமையான அழுத்தத்தைச் சந்திக்க நேரிடும். ஆனால், இதிலிருந்து மீண்டு வர சிறந்த திட்டமிடல் அவசியம்," என்று அவர் வலியுறுத்தினார்.
"இவையனைத்தும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களே. அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து ஒரு அணியாக அமர்ந்து விவாதித்து, அடுத்தடுத்த போட்டிகளுக்குத் திட்டங்களை வகுப்போம்," என்று சூரியகுமார் யாதவ் தனது பேச்சின் முடிவில் தெரிவித்தார்.