நாக்பூர்: டி20 உலககோப்பை 2026 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி, தொடர்ந்து 2வது முறையாக இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் தனது மோசமான காலகட்டத்தை அனுபவித்து வருகிறார். சூர்யகுமார் பார்மில் இல்லை என்றால், இந்திய அணியின் பேட்டிங்கே தடுமாறும் நிலை ஏற்படலாம்.
சூர்யகுமார் கடைசியாக விளையாடிய 22 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல், சராசரியாக 12.84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும், ஃபுல் லெங்த் பந்துகளுக்கு எதிராகவும், விக்கெட்டுக்கு முன்னால் வேகமாக ரன் எடுப்பதிலும் சிரமப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுததியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 சர்வதேசத் தொடருக்குப் பிறகு, அவர் மும்பைக்காக விஜய் ஹசரே டிராபியின் 50 ஓவர்கள் போட்டியில் விளையாடி, இரண்டு முறை பேட் செய்து 24 மற்றும் 15 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். 35 வயதாகும் சூர்யகுமார், சொந்த மண்ணில் நடக்கும் டி20 உலகக் கோப்பையில் ஒரு நடப்பு சாம்பியனான இந்திய அணியை அவர் வழிநடத்த உள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த டி20 கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சூர்யகுமார், பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றி விளையாடுவதே, அவருடைய சரிவுக்கு காரணம் என்று முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 10 பந்துக்கு மேலாவது சூர்யகுமார் எதிர்கொண்டு பின்னர் அதிரடி காட்ட வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய சூரியகுமார், தனது பேட்டிங் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் நன்றாகவே வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து வருகின்றேன். ஆனால் ரன்கள் தான் எனக்கு போட்டியில் கிடைக்கவில்லை.
உண்மையிலே அது ஒரு குறையாக இருந்தாலும், நிச்சயம் டி20 உலக கோப்பைக்கு முன்பு நான் ரன்கள் குவிக்கும் பாதைக்கு திரும்பி விடுவேன் என்று உறுதி அளித்தார். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டி கொண்ட தொடர் உலக கோப்பைக்கு முன்பு நடைபெறுகிறது. இதில் சூரியகுமார் யாதவ், தன்னுடைய பேட்டிங்கில் அதிரடி காட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
பேட்டிங் மட்டும்தான் சூரிய குமாரின் குறையாக இருக்கிறது. மற்றபடி அணியை வழிநடத்துவதில் அவர் ஒரு கில்லி போல் செயல்படுகிறார். இதனால் பழைய சூர்யாவாக அவர் திரும்ப வர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.