மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்று களமிறங்குகிறது. திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் களமிறங்கவில்லை. மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளது, அணியில் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், 2025 ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் ஒரு சவாலான காலகட்டத்தைச் சந்தித்தார். அந்த ஆண்டில் 21 போட்டிகள் மற்றும் 19 இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட அவர் அடிக்கவில்லை. அவர் 13.62 சராசரியுடன் மொத்தம் 218 ரன்கள் மட்டுமே குவித்தார், அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் ஆகும்.

போட்டிக்கு முன்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், பேசிய சூர்யகுமார் வலைப்பயிற்சியில் தனது தற்போதைய பேட்டிங் செயல்பாடு குறித்து மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தார். கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக தனக்கு வெற்றியைத் தந்த ஆட்ட பாணியை தான் மாற்ற விரும்பவில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "ஒரு தொடரில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. அதிலிருந்து பயனுள்ள எதையாவது பெற நாங்கள் முயற்சி செய்கிறோம். நான் வலைப்பயிற்சியில் மிக நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். ரன்கள் நிச்சயமாக வரும். ஆனால் அதே சமயம், நான் வித்தியாசமாக எதுவும் செய்ய விரும்பவில்லை. எனது அடையாளத்தை மாற்ற நான் விரும்பவில்லை,"
"கடந்த 3-4 ஆண்டுகளில் எனக்கு வெற்றியைக் கொடுத்த அதே வழியில் பேட் செய்ய விரும்புகிறேன். ரன்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்வேன். இல்லாவிட்டால், நான் மீண்டும் பயிற்சிக்கு திரும்புவேன், கடுமையாக உழைத்து இன்னும் வலுவாக திரும்புவேன்," என்று சூர்யகுமார் யாதவ் குறிப்பிட்டார்.
"காயம் என்பது ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையின் ஒரு பெரிய அங்கம். இதை பற்றி நாம் எதுவும் செய்ய முடியாது. இது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆனால் அதே நேரத்தில், வேறு ஒருவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். திலக் மற்றும் வாஷிங்டன் இருவரும் இந்திய அணிக்காக விளையாடிய போதெல்லாம் நிறைய பங்களிப்பை வழங்கியுள்ளனர்."
"அவர்களை நாங்கள் நிச்சயமாக மிஸ் செய்வோம். ஆனால் அதே நேரத்தில், அவர்களுக்குப் பதிலாக ஒருவர் விளையாட வேண்டும். நாங்கள் ஒன்பது பேருடன் களமிறங்க முடியாது. ஆனால் ஆம், யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும், அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்," என்று இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் தெரிவித்தார்.