ராய்ப்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ளது. 209 ரன்கள் என்ற இமால இலக்கை இந்திய அணி மிக எளிதாக எட்டிப்பிடித்ததற்கு மிக முக்கிய காரணம் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டமே ஆகும். இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் பேட் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகக் கொண்டாடப்படும் சூர்யகுமார் யாதவ், கடந்த சில மாதங்களாகவே பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் திணறி வந்தார். கடைசியாக 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக அவர் அரைசதம் அடித்திருந்தார். அதன் பிறகு விளையாடிய 23 டி20 இன்னிங்ஸ்களில் அவரால் ஒருமுறை கூட 50 ரன்களைத் தொட முடியவில்லை.

சுமார் 468 நாட்கள் நீண்ட இந்த வறட்சிக்கு நேற்றைய ராய்ப்பூர் போட்டியில் அவர் முற்றுப்புள்ளி வைத்தார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அரைசதம் அடித்தவுடன் மைதானத்தைத் தொட்டு வணங்கி அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது நெகிழ்ச்சியாக இருந்தது.
இதை அடுத்து இந்திய அணி 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு நிம்மதியாக செல்லலாம். சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் மட்டுமே கவலை அளித்து வந்த நிலையில் அதற்கு விடை கிடைத்துள்ளது. மேலும், சரியான நேரத்தில் அவரது ஃபார்ம் திரும்பக் கிடைத்துள்ளது.
209 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த போட்டியின் நாயகன் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி தடுமாறிய அந்த இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், சற்றும் பதற்றம் அடையாமல் அணியை மீட்டார்.
முதலில் நிதானமாகத் தொடங்கி, பின்னர் பனிப்பொழிவு காரணமாகப் பந்துவீச்சாளர்கள் திணறியதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிரடி ஆட்டம் ஆடினார்.
இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், 3வது விக்கெட்டிற்கு 123 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார். இஷான் ஆட்டமிழந்த பிறகு, ஷிவம் துபே உடன் கைகோர்த்த சூர்யகுமார், ஆட்டத்தை முடித்து வைத்தார். இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்தது.
இறுதியில் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 28 பந்துகள் மீதம் இருக்கையிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 208 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 44 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 47 ரன்களும் எடுத்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இருப்பினும் சூர்யகுமார் யாதவின் சூறாவளி ஆட்டத்தின் முன் நியூசிலாந்தின் ஸ்கோர் கரைந்து போனது.