விசாகப்பட்டினம்: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில், இந்தத் தோல்வி இந்திய அணிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், தோல்விக்கான காரணம் மற்றும் அணியின் வியூகம் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெளிப்படையாக ஒரு உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
நியூசிலாந்து அணி நிர்ணயித்த 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிவம் துபே 23 பந்துகளில் 65 ரன்கள் குவித்துத் தனி ஆளாகப் போராடினார். இருப்பினும் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்திய அணி 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்த தோல்வி குறித்துப் பேசிய சூர்யகுமார் யாதவ், "இன்றைய போட்டியில் நாங்கள் வேண்டுமென்றே 6 பேட்ஸ்மேன்களை மட்டுமே களமிறக்கினோம். 5 முழுமையான பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட விரும்பினோம். இது எங்களுக்கு நாங்களே விடுத்துக்கொண்ட சவாலாகும்.
உதாரணத்திற்கு, 200 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடும்போது, ஆரம்பத்திலேயே 2 அல்லது 3 விக்கெட்டுகள் விழுந்துவிட்டால், மீதமுள்ள பேட்ஸ்மேன்கள் அந்தச் சூழலை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்பினோம். அதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்களைச் செய்தோம். இல்லையென்றால் வேறு வீரர்களைக் களமிறக்கியிருப்போம்.
நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது சிறப்பாகச் செயல்படுகிறோம். ஆனால், சேசிங் செய்யும்போது, அதுவும் விக்கெட்டுகள் விழுந்த இக்கட்டான நிலையில் வீரர்கள் எப்படிப் பொறுப்பேற்று ஆடுகிறார்கள் என்பதைச் சோதிக்க விரும்பினேன். இது ஒரு நல்ல கற்றல் அனுபவமாக அமைந்தது" என்று தெரிவித்தார்.
சிவம் துபேவின் ஆட்டம் மற்றும் பனிப்பொழிவு குறித்துப் பேசிய கேப்டன், "மைதானத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. சிவம் துபே பேட்டிங் செய்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அவருக்குத் துணையாக இன்னொரு பேட்ஸ்மேன் மட்டும் நிலைத்து நின்றிருந்தால், ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும்.
சிவம் துபேவுடன் ஒன்று அல்லது இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும் பரவாயில்லை. இதுபோன்ற கடினமான சேசிங் அனுபவங்கள் வருங்காலத்திற்கு உதவும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.