ராய்ப்பூர்: ராய்ப்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 209 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி மிக எளிதாக எட்டிப்பிடித்துத் தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. வெறும் 15.2 ஓவர்களில் 209 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்டி இந்திய அணி வாயை பிளக்க வைத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அதிரடி ஆட்டமே இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்குத் துவக்க வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 3.2 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்தது. கான்வே 19 ரன்களிலும், சீஃபர்ட் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ரச்சின் ரவீந்திரா இந்திய பந்துவீச்சாளர்களைச் சோதித்தார். அவர் 26 பந்துகளில் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நடுவரிசையில் டேரில் மிட்செல் 18 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 47 ரன்கள் குவிக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டியது.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக்கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
209 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் போட்டியின் நாயகன் அபிஷேக் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல் சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு களத்தில் இணைந்த இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக இஷான் கிஷன் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 21 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார்.
மறுமுனையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான பாணியில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை விரட்டினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டிற்கு 122 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இஷான் கிஷன் 32 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் வெளியேறிய பின்னரும் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியைத் தொடர்ந்தார். அவருக்குத் துணையாக வந்த சிவம் துபே 18 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் இந்திய அணி 15.2 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.