அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் உலகக் கோப்பையுடன் நள்ளிரவில் அனுமன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்து கோப்பை வழங்கும் விழா, செய்தியாளர் சந்திப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடர்பான அனைத்துப் பணிகளும் நள்ளிரவில் நிறைவடைந்தன.

அதன் பிறகு, வெற்றியின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாகவும், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் சூர்யகுமார் யாதவ், கௌதம் கம்பீர் மற்றும் ஜெய் ஷா ஆகியோர் அகமதாபாத் மைதானத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள புகழ்பெற்ற அனுமன் டேக்ரி கோயிலுக்குச் சென்றனர். அங்கு உலகக் கோப்பையை வைத்து அவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பல்வேறு புதிய வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில், சொந்த மண்ணில் போட்டியை நடத்தி உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மேலும், நடப்பு சாம்பியனாகக் களமிறங்கி மீண்டும் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்ட முதல் அணி என்ற சாதனையையும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தன்வசப்படுத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்ததே இந்தச் சிறப்பான வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். 256 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் நேர்த்தியான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

இந்த டி20 உலகக் கோப்பை வெற்றியானது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிறப்பான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான குறுகிய காலகட்டத்தில் இந்திய அணி வெல்லும் மூன்றாவது ஐசிசி கோப்பை இதுவாகும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதைய காலகட்டத்தின் மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான அணியாக இந்திய அணி தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.