நாக்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். சமீப காலமாக ரன் குவிக்க முடியாமல் திணறி வந்த அவர், இந்த போட்டியில் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்தார்.
இந்த போட்டியில் 32 ரன்கள் எடுத்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றார். அதுமட்டுமின்றி, மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை எட்டிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் 321 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும் (271 இன்னிங்ஸ்), ஷிகர் தவான் இரண்டாவது இடத்திலும் (308 இன்னிங்ஸ்) உள்ளனர். ரோகித் சர்மா 329 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை எட்டியிருந்தார். சர்வதேச அளவில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 245 இன்னிங்ஸ்களில் 9000 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.
கடந்த சில மாதங்களாக சூர்யகுமார் யாதவின் பேட்டிங் கவலை அளிக்கும் வகையில் இருந்தது. கடைசியாக 2024 அக்டோபர் மாதம் வங்கதேசத்திற்கு எதிராக ஹைதராபாத்தில் அரைசதம் அடித்திருந்தார். அதன் பிறகு விளையாடிய 22 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
இந்தச் சூழலில், இந்த போட்டியில் 4வது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார், ஆரம்பம் முதலே நேர்த்தியாக விளையாடினார். மிட்செல் சாண்ட்னர் மற்றும் இஷ் சோதி பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன்களைச் சேர்த்தார். 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் 32 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.
குறிப்பாக கிளார்க் வீசிய பந்தில் அவர் அடித்த சிக்ஸர், பழைய சூர்யகுமாரை ரசிகர்களுக்கு நினைவூட்டியது. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை விரட்டி நம்பிக்கை அளித்தார். ஒரு பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சில் டிம் ராபின்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்தாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தது இந்திய அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.