அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைத் தன்வசப்படுத்தியுள்ளது. தோனி, ரோஹித் சர்மா ஆகியோருக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன்களின் வரிசையில் சூர்யகுமார் யாதவும் இணைந்துள்ளார். இந்த வெற்றிக்குப் பிறகு, தனது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், தனது அடுத்த இலக்கு என்ன என்பது குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
உலகக் கோப்பையை வென்ற பிறகு சில மூத்த வீரர்கள் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது வழக்கம். ஆனால், வெற்றி பெற்ற கையோடு செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யகுமார் யாதவ், தற்போதைக்குத் தான் ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டார். வெற்றிகளைப் பெறும் வீரர்கள் எப்போதுமே பழைய வெற்றிகளோடு திருப்தி அடைந்துவிட மாட்டார்கள். அந்த வரிசையில் தானும் ஒருவராக இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்..

தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய சூர்யகுமார் யாதவ், "உலகக் கோப்பையை வென்ற இந்த உணர்வில் இருந்து முழுமையாக வெளியே வர எனக்குச் சிறிது நேரம் ஆகும். சொந்த மண்ணில் விளையாடி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான ஒரு உணர்வாகும். கடந்த ஒரு மாதமாக நாங்கள் கடந்து வந்த பயணம் மிகச் சிறப்பானது. ஆனால், எங்களது பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை.
எனது அடுத்த இலக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டிற்கான தங்கப் பதக்கத்தை வெல்வதுதான். அதேபோல அந்த ஆண்டில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையையும் தக்கவைக்க வேண்டும். 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம், இப்போது சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றுள்ளோம். இதேபோல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் எங்கள் வெற்றிப் பயணம் தொடரும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை குறித்தும் சூர்யகுமார் யாதவ் நினைவுகூர்ந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் பிடித்த அந்த ஒரு கேட்ச் தான், இந்திய அணிக்குக் கோப்பையை உறுதி செய்தது.

அது குறித்துப் பேசிய அவர், "அந்த ஒரு கேட்ச் எனது வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தொடரின் மிக முக்கியமான தருணமாக அது அமைந்தது. அதன் பிறகு இந்தச் சிறப்பான அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. சொந்த மண்ணில் உலகக் கோப்பையை விளையாடப் போகிறோம் என்பது தெரிந்ததிலிருந்தே நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். இந்தியாவில் விளையாடும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, அவர்களுக்கு இந்த வெற்றியைப் பரிசளித்ததில் மிகுந்த மகிழ்ச்சி" என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
