அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்றுச் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குக் கேப்டன் சூர்யகுமார் யாதவின் சாதுர்யமான முடிவுகளும் முக்கியப் பங்கு வகித்தன. குறிப்பாக, நியூசிலாந்து அணியின் அபாயகரமான தொடக்க வீரர் ஃபின் ஆலனை வீழ்த்த சூர்யகுமார் வகுத்த வியூகம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன், இறுதிப்போட்டிக்கு முன்பு வரை 7 போட்டிகளில் 289 ரன்கள் குவித்து மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தார். அதிலும் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் அடித்த அதிவேக சதம் அனைவரையும் மிரள வைத்தது. வேகப்பந்து வீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்டு ரன் குவிக்கும் ஆற்றல் கொண்ட அவர், சுழற்பந்து வீச்சில் சற்று தடுமாறுவார் என்பதை இந்திய அணி நிர்வாகம் முன்கூட்டியே கணித்திருந்தது.

இந்த பலவீனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ், பவர்பிளேயின் மூன்றாவது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேலை பந்துவீச அழைத்தார். கேப்டனின் நம்பிக்கையை வீணாக்காத அக்சர் பட்டேல் வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தில், ஃபின் ஆலன் பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். ஆனால், பந்து சரியாக பேட்டில் படாமல் நேராக லாங்-ஆன் திசையில் நின்றிருந்த திலக் வர்மாவிடம் கேட்ச் ஆனது. ஃபின் ஆலனின் இந்த விக்கெட் நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
சூர்யகுமார் யாதவின் இந்த துல்லியமான திட்டமிடலை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். "பவர்பிளேயில் அக்சர் பட்டேலை பந்துவீச அழைத்தது கேப்டன் சூர்யகுமார் யாதவின் மாஸ்டர் கிளாஸ்" என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர், "முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார், இரண்டாவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். மூன்றாவது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேலைக் கொண்டு வந்து விக்கெட்டை வீழ்த்திய சூர்யகுமார், அடுத்தபடியாக நான்காவது ஓவரில் பும்ராவைக் கொண்டு வந்து எதிரணிக்கு மேலும் அழுத்தத்தை அதிகரித்தார். இது மிகச் சிறந்த கேப்டன்சி" என்று புகழ்ந்துள்ளார்.

இந்த இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை பதிவு செய்தது. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். சஞ்சு சாம்சன் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 52 ரன்களும், இஷான் கிஷன் 54 ரன்களும் சேர்த்தனர்.
பிரம்மாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டு நீண்ட கால சாபங்களை உடைத்துள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். அதேபோல, அகமதாபாத் மைதானத்தில் ஐசிசி நடத்தும் வெள்ளைப்பந்து தொடர்களில் இந்திய அணி பெறும் முதல் வெற்றியும் இதுதான். கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இதே மைதானத்தில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
