மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இரண்டு முக்கிய மைல்கற்களை எட்டும் வாய்ப்பு இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்;ககு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், சூர்யா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் புதிய சாதனைகளைப் படைக்கத் தயாராக உள்ளார்.
கேப்டனாக இதுவரையில் 42 டி20 போட்டிகளில் 39 இன்னிங்ஸ்களில் களமிறங்கியுள்ள சூர்யகுமார், 927 ரன்கள் குவித்துள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் அவர் 73 ரன்கள் எடுத்தால் டி20 கேப்டனாக 1000 ரன்கள் எடுத்த நான்காவது இந்திய வீரர் ஆவார். தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரின் பட்டியலில் இவர் இணைவார்.

இந்திய கேப்டன்களில் ரோஹித் ஷர்மா 62 போட்டிகளில் 1905 ரன்களுடனும், விராட் கோலி 50 போட்டிகளில் 1570 ரன்களுடனும், எம்.எஸ். தோனி 72 போட்டிகளில் 1112 ரன்களுடனும் முன்னிலையில் உள்ளனர். கேப்டனாக சூர்யகுமார் ஒரு சதம் மற்றும் ஆறு அரைசதங்கள் அடித்துள்ளார்.
உலக அளவில் கேப்டனாக அதிக டி20 ரன்கள் எடுத்தவர் பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆவார். அவர் 85 போட்டிகளில் 2642 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச் 76 போட்டிகளில் 2236 ரன்களுடனும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முஹம்மது வசீம் 67 போட்டிகளில் 2222 ரன்களுடனும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 75 போட்டிகளில் 2153 ரன்களுடனும் அடுத்த இடங்களில் உள்ளனர்.
கேப்டன்சி சாதனையைத் தவிர, சர்வதேச டி20 அரங்கில் 3000 ரன்களை எட்டும் மற்றொரு மைல்கல்லையும் சூர்யகுமார் யாதவ் இன்று அடையக்கூடும். அவர் இதுவரை 97 இன்னிங்ஸ்களில் 2967 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த போட்டியில் 33 ரன்கள் எடுத்தால், ரோஹித் ஷர்மா (4231 ரன்கள்) மற்றும் விராட் கோலி (4188 ரன்கள்) ஆகியோருக்குப் பிறகு 3000 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் ஆவார்.
சூர்யகுமார் தனது டி20 சர்வதேச வாழ்க்கையில் நான்கு சதங்களையும், 23 அரைசதங்களையும் அடித்துள்ளார்.சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 11 பேட்டர்கள் 3000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இந்த 11 பேட்டர்களில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிலிருந்து தலா இரண்டு வீரர்களும், நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியாவிலிருந்து தலா ஒரு வீரரும் அடங்குவர்.