இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையின் கீழ், இந்திய அணி டி20 தொடர்களில் இதுவரை தோல்வியைச் சந்தித்ததில்லை. உலகின் நம்பர் 1 டி20 அணியாகத் திகழும் இந்தியா, தனது இந்த சாதனைப் பயணத்தைத் தொடர வேண்டும் என்ற இலக்குடன் இந்தத் தொடரிலும் களமிறங்கியுள்ளது.
மறுபுறம், நியூசிலாந்து அணி கடந்த வாரம் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. இந்த டி20 தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் நியூசிலாந்து, ரச்சின் ரவீந்திரா, மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, மார்க் சாப்மேன், ஜிம்மி நீஷம் மற்றும் கேப்டன் மிட்செல் சான்ட்னர் போன்ற நட்சத்திர வீரர்களின் வருகையால் பலம் பெற்றுள்ளது.

போட்டியின் தொடக்கத்தில் இந்தியா அதிரடியாக ஆடியது. சஞ்சு சாம்சன் 10 ரன்களிலும், இசான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 3 ஓவருக்குள் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் அபிஷேக் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் அரை சதம் அடித்தார்.அப்போது அவர் நான்கு பவுண்டரிகளும், நான்கு சிக்சர்களும் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 8.4 ஓவர்களில் எல்லாம் 100 ரன்களை கடக்க பத்து ஓவர் முடிவில் 117 ரன்கள் எடுத்தது.
இஷ் சோதி வீசிய 11.1வது ஓவரில் பவுண்டரி அடித்து அதிரடியைத் தொடங்கிய அபிஷேக் ஷர்மா, அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். குறிப்பாக, 11.3வது ஓவரில் அடித்த சிக்ஸர் மூலம், அவர் தனது 5000வது டி20 ரன்னை அதிவேகமாக எட்டிப் புதிய மைல்கல்லைப் பதிவு செய்தார். சிறப்பாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அபாரமாக விளையாடி வந்த அபிஷேக் ஷர்மா, 35 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இஷ் சோதி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, தனது முதல் ஓவரிலேயே ஒரு ரன் எடுத்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினார். கிறிஸ்டியன் கிளார்க்கின் பந்துவீச்சில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இந்த ஓவர் சற்று நிதானமாகவே அமைந்தது.
கைல் ஜேமிசன் மீண்டும் பந்துவீசத் தொடங்கிய 13வது ஓவரில், ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்து அதிரடி காட்டினார். பின்னர் ஷிவம் தூபே, 13.3 ஓவரில் ஜேமிசனை ஒரு சிக்ஸர் விளாசி அசத்தினார். எனினும், அதே ஓவரில் ஷிவம் தூபே 9 ரன்கள் எடுத்திருந்த போது (கேட்ச் அண்ட் பவுல்டு முறையில்) கைல் ஜேமிசன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, ரிங்கு சிங் களமிறங்கி ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்தார்.
மிட்செல் சான்ட்னர் மீண்டும் பந்துவீச வந்ததும், ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் விளாசினார். இந்த ஓவரில் இருந்து மட்டும் 14 ரன்கள் குவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஜேக்கப் டஃபி தனது பந்துவீச்சுக்குத் திரும்பி, ஹர்திக் பாண்டியாவுக்கு யார்க்கர் பந்து வீசிச் சோதித்தார். இந்திய அணி 185 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை ஜேக்கப் டஃபி வெளியேற்றினார். ஹர்திக் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அக்சர் பட்டேல் 5 ரன்களில் வெளியேறினார். இறுதியில் இந்தியா விக்கெட்டுகளை தவறவிட்டாலும், ரிங்கு சிங் மட்டும் தனி ஆளாக போராடி 20 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் மட்டும் ரிங்கு சிங் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது.