IND vs NZ: பைனலில் கொளுத்திய சாம்சன், அபிஷேக் ஜோடி.. 43 பந்துகளில் 98 ரன்கள் விளாசி அபாரம்
அகமதாபாத்: டி20 உலக கோப்பை 2026 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் தொடக்க ஜோடி மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு வரை இந்திய அணியின் தொடக்க ஜோடி பட்டையைக் கிளப்பி வந்தது.
இந்திய அணி வெற்றிகளுக்கு வலுவான அடித்தளத்தை இந்த ஜோடி அமைத்துக் கொடுத்ததே இதற்கு காரணம். பவர் பிளேவில் சிறப்பாக பயன்படுத்தி விக்கெட்டுகளையே விழாமல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பார்கள்.

இதனால் எதிரணிக்கு கடும் நெருக்கடி ஏற்படும். இதன் காரணமாக சர்வ சாதாரணமாக இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து வந்தது. ஆனால் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி கடுமையாக சோபிக்க தவறியது. சுழற் பந்துவீச்சாளர்களை எதிர் கொள்ள முடியாமல் அபிஷேக் ஷர்மா தனது விக்கெட்டை சொற்ப ரன்களில் பறி கொடுப்பதை இதற்கு காரணமாக அமைந்தது.
இதனால் அபிஷேக் ஷர்மாவை தூக்க வேண்டும் என்று பேச்செல்லாம் அடிபட்டது. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் தங்களுடைய பழைய பார்மை அபிஷேக் ஷர்மா வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாக பொழுதுபோக்கை வழங்கினார். தீபாவளிக்கு வாண வேடிக்கை விடுப்பது போல் சஞ்சு சாம்சனும் அபிஷேக் சர்மா இணைந்து சிக்சர் மழை பொழிந்தனர்.
இதன் காரணமாக இந்திய அணி வெறும் நான்கு ஓவர் முடிவில் 50 ரன்கள் கடந்தது. இதன் மூலம் நடப்பு உலககோப்பை தொடரில் முதல்முறையாக தொடக்க ஜோடி 50 ரன்கள் கடந்தது. தங்களுடைய பணி முடிந்தது என்று நினைக்காமல் தொடர்ந்து இந்த ஜோடி அதிரடி காட்டியது. சிக்சர், பவுண்டரி என அவர்கள் விளாச 7 புள்ளி 1 ஓவரில் இந்த ஜோடி 98 ரன்கள் சேர்த்து நிலையில் அபிஷேக் ஷர்மா எதிர்பாராத விதமாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இந்திய அணி முதல் விக்கட்டுக்கு 98 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி முதல் விக்கெட் சேர்க்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதில் மூன்று சிக்சர், ஆறு பவுண்டரிகள் அடங்கும்.


Click it and Unblock the Notifications