டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் தடுமாறி வரும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, நியூசிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில் சிறப்பாகச் செயல்படுவார் என இந்திய அணி முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத்தொடரில் அற்புதமான தொடக்கத்திற்குப் பிறகு, கடந்த நான்கு ஆட்டங்களில் வருண் சக்கரவர்த்தி தடுமாறியுள்ளார்.
இந்த நான்கு ஆட்டங்களில் வருண் சக்கரவர்த்தி ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளார். மேலும், ஒரு போட்டிக்கு ஒரு விக்கெட் மட்டுமே என்ற சராசரியைப் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், அவர் தனது நான்கு ஓவர்களில் 64 ரன்களை விட்டுக்கொடுத்து மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இருப்பினும், தனது யூடியூப் சேனலில், வருண் மெதுவாகப் பந்துவீசி, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஜோஸ் பட்லரை வீழ்த்திய பந்துவீச்சை மீண்டும் பயன்படுத்துமாறு ஸ்ரீகாந்த் அறிவுறுத்தினார். இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், "பட்லருக்கு வீசப்பட்ட பந்து மெதுவாக இருந்தது, அது காற்றில் அவரைக் கடந்து சென்றது. அந்த ஒரு பந்தை மட்டும் வீசுங்கள், வேறு எதுவும் வேண்டாம்.

பந்துக்கு சற்று வேகம் குறைத்து, பேட்ஸ்மேனை காற்றில் வீழ்த்துங்கள். அவர் நேராக அடித்தால் பரவாயில்லை. ஆனால் குறுக்காக அடித்தால், உங்களுக்கு விக்கெட் கிடைக்கும். நாளை அவர் நிச்சயமாக இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார். பட்லருக்கு வீசிய பந்தை கனவு கண்டு, அதைப் பயன்படுத்துங்கள். அந்த வீடியோவை தொடர்ந்து பாருங்கள்" என்று கோரினார்.
"அவர் மெதுவாகப் பந்து வீச வேண்டும், பவுண்டரி, சிக்ஸர் கொடுத்தாலும் பரவாயில்லை. தைரியமாக மெதுவாகப் பந்து வீசுங்கள், அவர்கள் உங்களை அடித்து நொறுக்கினாலும் கவலைப்பட வேண்டாம். அபிஷேக் சர்மா அனுபவிக்கும் அதே சிக்கலை அவர் அனுபவிப்பதால் இது இந்தியாவுக்கு ஒரு சிறிய கவலைதான். இருவரும் தரவரிசையில் நம்பர் 1 வீரர்கள், எனவே எதிர்பார்ப்புகள் அதிகம்."

வருண் சக்கரவர்த்தியின் சமீபத்திய தடுமாற்றங்கள் இருந்தாலும், இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதே டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியின் மற்றொரு ஃபார்ம் அவுட் வீரரான அபிஷேக் சர்மா மற்றும் அவரது தடுமாற்றங்கள் குறித்தும் ஸ்ரீகாந்த் பேசினார். அபிஷேக், ஏழு போட்டிகளில் ஒரு அரை சதத்துடன், 13 ரன்களுக்கும் குறைவான சராசரியுடன் தடுமாறி வருகிறார்.
“அபிஷேக் சர்மா தனக்குத்தானே அழுத்தத்தை உருவாக்கிக் கொள்கிறார். அவர் ஃபார்ம் அவுட் ஆகவில்லை. ஜிம்பாப்வேக்கு எதிராக 50 ரன்கள் எடுத்தார். அவர் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததால், மன அழுத்தத்தை உருவாக்கிக் கொள்கிறார். நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும்போது, எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும், மேலும் சில முறை நீங்கள் தோல்வியுற்றால் ரன் எடுக்க வேண்டும் என நீங்கள் உணர்கிறீர்கள்” என்று ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார்.
“அபிஷேக் சர்மா நிம்மதியாக, சுதந்திரமாக விளையாட வேண்டும். அவுட் ஆனால் பரவாயில்லை, அவ்வளவுதான். அவர் செய்யக்கூடிய ஒரே விஷயம், குறுக்காக அடிக்காமல், ஆப் சைடு அல்லது நேராக ஆட முயற்சிப்பதே. அவர் இதுபோன்ற சில சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்த நிலை அனைத்து சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் நடக்கும் என்பதால் அவர் கவலைப்படத் தேவையில்லை. அவர் ஒரு மனநல மாற்றத்தை மட்டுமே செய்ய வேண்டும்.” என்று ஸ்ரீகாந்த் ஆலோசனை வழங்குவார்கள்.