மும்பை: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்கள் வீழ்ந்துள்ளன. இது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்து இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0 - 2 என தொடரை இழந்து இருக்கிறது.
மூன்றாவது மற்றும் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்தியா இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கும் அவசியம் ஆகும்.

ஆனால், இந்தியா மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது. மூன்றாவது போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் உள்ளது. நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது.
துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரோஹித் சர்மா 18 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். முகமது சிராஜ் கடைசி நேரத்தில் நைட் வாட்ச்மேனாக, விக்கெட் வீழ்ச்சியை தடுப்பதற்காக களம் இறக்கப்பட்டார். தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ஒரு ரன் ஓட ஆசைப்பட்டு ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்த நிலையிலும், ரிஷப் பண்ட் ஒரு ரன் எடுத்த நிலையிலும் களத்தில் உள்ளனர். இந்த போட்டிக்கான பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருப்பது மோசமான விஷயமாக மாறி உள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்கள் வீழ்ந்துள்ள நிலையில் இனி ஒவ்வொரு நாளும் இதேபோல விக்கெட் வீழ்ச்சி அதிகமாக இருந்தால், மூன்று நாட்களில் போட்டி முடிந்து விடும்.
மேலும் இந்திய அணி தற்போது 100 ரன்களை எட்டுவதற்குள் 4 விக்கெட்களை இழந்து இருக்கிறது. அடுத்த 6 விக்கெட்களை கொண்டு எத்தனை ரன்கள் சேர்க்கும்? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 350 முதல் 400 ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் உள்ளது. இல்லையெனில் இந்திய அணி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.