விசாகப்பட்டினம்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிம் சீஃபர்ட் அதிரடி ஆட்டம் ஆடினார். ஏற்கனவே நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவித் தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணிக்கு, இந்தப் போட்டியில் டிம் சீஃபர்ட்டின் ஆட்டம் பெரும் ஆறுதலை அளித்தது.
டிம் சீஃபர்ட் களத்தில் இருந்த வரை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி இறைத்தனர். ஒரு ஓவருக்கு 12 ரன்கள் என்ற விகிதத்தில் அப்போது நியூசிலாந்து அணி ரன் குவித்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், அவரது கணிப்பை பொய்யாக்கும் வகையில் நியூசிலாந்து துவக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். குறிப்பாக டிம் சீஃபர்ட் இந்திய பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நாலாபுறமும் ஓடவிட்டார்.
ஹர்ஷித் ராணா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரின் ஓவர்களைக் குறிவைத்துத் தாக்கிய அவர், வெறும் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். நடப்புத் தொடரில் நியூசிலாந்து வீரர் ஒருவர் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். தொடர் முழுவதும் திணறி வந்த நியூசிலாந்து பேட்டிங் வரிசைக்கு, சீஃபர்ட்டின் இந்த இன்னிங்ஸ் புது ரத்தத்தைப் பாய்ச்சியது போல் அமைந்தது.
மறுமுனையில் டெவோன் கான்வேயும் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இவர்கள், முதல் விக்கெட்டிற்கு வெறும் 50 பந்துகளில் 100 ரன்களைச் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். கான்வே 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய டிம் சீஃபர்ட் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 இமால சிக்ஸர்களுடன் 62 ரன்கள் குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 172 ஆக இருந்தது. ஒரு பெரிய ஸ்கோரை அவர் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
டிம் சீஃபர்ட் மற்றும் கான்வே ஆட்டமிழந்த பிறகு, நியூசிலாந்து அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது. ரச்சின் ரவீந்திரா 2 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 24 ரன்களிலும், மார்க் சாப்மேன் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தை மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் சீஃபர்ட் அமைத்துத் தந்த அடித்தளத்தைப் பயன்படுத்தி நியூசிலாந்து அணி 200 ரன்களை தாண்டியது. இந்திய அணியில் குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பும்ரா, ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.