கவுஹாத்தி: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பெற்ற இமால வெற்றி, கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்திய அணியின் இந்த அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்து வர்ணனையாளர்கள் வியந்து போயுள்ளனர். குறிப்பாக இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மற்றும் நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டல் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து அணி நிர்ணயித்த 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்துத் தொடரைக் கைப்பற்றியது. போட்டி முடிந்த பிறகு இது குறித்துப் பேசிய நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டல், இந்திய அணியின் ஆழமான பேட்டிங் வரிசையைப் பார்த்து பிரமித்துப் போனார்.

அவர் கூறுகையில், "வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா நினைத்தால் இரண்டு அணிகளைக் களமிறக்கலாம். அப்படி இரண்டு அணிகள் விளையாடினாலும், அந்த இரண்டு அணிகளுமே நிச்சயம் முதல் நான்கு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெறும். அந்த அளவிற்கு அவர்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர்" என்று புகழ்ந்து தள்ளினார்.
சைமன் டல் கூறியதைக் கேட்ட சுனில் கவாஸ்கர், அதற்குச் சிரித்துக்கொண்டே ஒரு படி மேலே சென்று பதிலளித்தார். "உண்மையில் என்னைக் கேட்டால், அரையிறுதி மட்டுமல்ல, அந்த இரண்டு இந்திய அணிகளுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறி, கோப்பைக்காகத் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் என்று சொல்வேன்" என்று அதிரடியாகக் கூறினார்.
அதாவது இந்திய அணியின் முதல் தர அணியும், இரண்டாம் தர அணியும் மோதினாலே அது உலகக்கோப்பை இறுதிப்போட்டி போலத் தான் இருக்கும் என்று கவாஸ்கர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கவுஹாத்தி போட்டியில் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன்பின் இளம் வீரர் அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நியூசிலாந்து பந்துவீச்சைச் துவம்சம் செய்தனர். அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 68 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்களும் குவித்து, 60 பந்துகள் மீதம் இருக்கையிலேயே அணியை வெற்றி பெறச் செய்தனர்.
யுவராஜ் சிங்கின் 12 பந்து அதிவேக அரைசத சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அபிஷேக் சர்மா 2 பந்துகளில் தவறவிட்டார். இப்படி ஒவ்வொரு வீரரும் போட்டி போட்டுக்கொண்டு அதிரடி காட்டுவதே கவாஸ்கர் மற்றும் சைமன் டல் ஆகியோரின் இந்த வியப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.