கவுஹாத்தி: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது. 154 ரன்கள் என்ற இலக்கை வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து இந்தியா சாதனை படைத்தாலும், அணியின் தேர்வு முறை குறித்து மூத்த வீரர் அஜிங்கியா ரஹானே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடரில், பந்துவீச்சாளர்களைச் சுழற்சி முறையில் இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. அதன்படி, இரண்டாவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மூன்றாவது போட்டியில், உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டார். இந்த முடிவைத் தான் ரஹானே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ரஹானே, "2026 டி20 உலகக்கோப்பையில் நெருங்கி வரும் வேளையில், அணியில் நிலையான வீரர்கள் இருக்க வேண்டும். வருண் சக்கரவர்த்தி தற்போது மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த ஆண்டு மட்டும் 20 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தான் உங்கள் முதன்மை பந்துவீச்சாளர்.
டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரைப் பந்துவீச்சாளர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் லயம் (Rhythm) மிக முக்கியம். உலகக்கோப்பைக்கு முன்பு அவரை உட்கார வைப்பது, அவரது மனநிலையைப் பாதிக்கலாம். காயம் ஏற்படும் என்று பயந்து வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி எல்லாப் போட்டிகளிலும் விளையாட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் முடிவதற்குள், உலகக்கோப்பைக்கான 11 பேர் கொண்ட அணியை நீங்கள் உறுதி செய்தாக வேண்டும். என்னைக் கேட்டால், முதல் டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணியே உலகக்கோப்பைக்கான சரியான கலவையாகத் தோன்றுகிறது" என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.
ரஹானேவின் விமர்சனம் ஒருபுறம் இருக்க, வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாகக் களமிறங்கிய ரவி பிஷ்னோய் தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். 4 ஓவர்கள் வீசிய அவர், வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதேசமயம், அணியில் இடம்பெற்ற மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் பெரிதாகச் சோபிக்கவில்லை. அவர் 3 ஓவர்களில் 32 ரன்களை வாரி வழங்கினார். விக்கெட் எதுவும் அவரால் வீழ்த்த முடியவில்லை. ரஹானேவின் கருத்துப்படி பார்த்தால், குல்தீப் யாதவை விட வருண் சக்கரவர்த்தியே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் சுந்தர் காயத்தால் வெளியேறி உள்ள நிலையில் ரவி பிஷ்னோய் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு போட்டிப் பயிற்சி தேவை என்ற நோக்கில் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு மூன்றாவது டி20 போட்டியில் வாய்ப்பு அளித்து இருக்கிறது. எனினும், வருண் சக்கரவர்த்தி அடுத்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புவாரா? என்ற கேள்வியும் உள்ளது.