மும்பை: 2026 டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் மோசமான ஃபார்ம் தமக்கு கவலை அளிப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்கொள்ளும் வழியை கண்டுபிடித்துவிட்டார்கள் என்று பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் அரையிறுதி வெற்றிப் போட்டியில், வருண் தனது டி20 சர்வதேச கரியரிலேயே மிக மோசமான பந்துவீச்சை 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் விட்டு கொடுத்தார். அரையிறுதிக்கு முந்தைய மூன்று போட்டிகளிலும், அவர் பத்துக்கும் அதிகமான எகானமி ரேட்டுடன் ரன்களை வாரி வழங்கியிருந்தார்.
{image-IND vs NZ-05-2026-000801b-jpg-1772876399851_1772876402743-600x338.jpg tamil.mykhel.com}
வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு ஃபார்ம் சரிவு குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பத்ரிநாத், "ஸ்பின்னர்கள் கவலையளிக்கிறார்கள். அவர்கள் நிறைய ரன்களைக் கொடுக்கிறார்கள். வருண் சக்ரவர்த்தி அணிக்கு மிகவும் முக்கியமான வீரர். அவருடைய பந்துவீச்சை எதிரணிகள் கணித்துவிட்டார்கள் என தோன்றுகிறது. வெறும் ரன்களைக் கொடுப்பதில்லை, அவர் உள்ளே வரும் பந்துகளை மட்டுமே வீசுகிறார் என்பதே பெரிய கவலை" என்றார்.

"வருண் ரன்களை வாரி வழங்குவது, இந்தியாவின் ஆறாவது பந்துவீச்சு ஆப்சன் ஷிவம் துபே மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. துபேயை நம்புவது கடினம். அவர் 10-15 ரன்கள் மட்டுமல்லாமல், ஒரு ஓவரில் 20-25 ரன்களை வழங்குகிறார். கடந்த போட்டியில்கூட, சூர்யகுமார் யாதவ் 20வது ஓவர் வரை அவரிடம் பந்து வீச நம்பிக்கையின்றி இருந்தார். அபிஷேக் ஷர்மாவை நீக்கிவிட்டு, ஒரு கூடுதல் பந்துவீச்சாளரை இந்தியா ஏன் சேர்க்கக்கூடாது?" என்றார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் அளித்த அதிகபட்ச ரன்களில், வருண் சக்ரவர்த்தி 64 ரன்கள் வழங்கியது, அமெரிக்காவின் சௌரப் நேத்ராவல்கருக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச ரன்கள் ஆகும். இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி, கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தால் வருண் சக்ரவர்த்தி நம்பிக்கைக் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் வருண் இப்போதும் 13 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் முன்னணி விக்கெட் வீழ்த்துபவராக உள்ளார். இருப்பினும், அவரது எகானமி ரேட் ஒன்பது ரன்களுக்கு சற்றுக் குறைவாகவே இருக்கிறது.இது குறித்து பேசிய பாலாஜி, "கடைசி சில போட்டிகள் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சுகளில் நடந்துள்ளன. ஆனால் புள்ளிவிவரங்களை விட, அவரது நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. வருண் சக்ரவர்த்தி அமைதியான அணுகுமுறையைக் கையாளலாம் மற்றும் அழுத்தத்தை சிறப்பாகச் சமாளிக்கலாம்."

"அவர் ஒவ்வொரு பந்தையும் ஒரு தருணமாகப் பிரித்து சிந்திக்க வேண்டும், ஆறு பந்துகளையும் ஒரே நேரத்தில் எண்ணி விளையாடக்கூடாது. ஒவ்வொரு பந்தையும் ஒரு இலக்காகக் கொண்டு, அதை வெல்ல முயற்சிக்க வேண்டும். எதிரணிகள் உடனடியாகத் தாக்கி வருணை மனதளவில் சோதிக்கின்றன. வருண் சற்றே ஓய்வெடுக்க வேண்டும். அவர் நிரூபிக்கப்பட்ட விக்கெட் வீழ்த்துபவர். எனவே இது கவலைக்குரியதல்ல, இந்தியா வருணுடன் செல்ல வேண்டும். அவர் இப்போது எப்படி பதிலளிக்கிறார் என்பதே முக்கியம்" என்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 8 அன்று அகமதாபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் வருண் தனது முழு திறனுடன் செயல்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.