வதோரா: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய போது விராட் கோலி, இந்த சாதனையை நிகழ்த்தினார்.
கோலி தற்போது 28,017 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு குமார் சங்கக்காரா 28,016 ரன்கள் என்ற சாதனையைத் தாண்டிச் சென்றார். இந்திய அணி 301 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடியபோது, சங்கக்காராவின் சாதனையை முறியடிக்க கோலிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டன. போட்டியின் 19வது ஓவரிலேயே அந்த இலக்கை எட்டி கோலி சாதனை படைத்தார். அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் இந்த மைல்கல் முக்கிய பங்காற்றுகிறது.

கோலியின் ரன்கள் சாதனையைப் பொறுத்தவரை, 123 டெஸ்ட் போட்டிகளில் 9230 ரன்களையும், 125 டி20 போட்டிகளில் 4188 ரன்களையும் குவித்துள்ளார். மேலும், 309 ஒருநாள் போட்டிகளில் இதுவரை 14,599 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். மொத்தம் 557 சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 664 போட்டிகளில் 34,357 ரன்கள் அடித்துள்ளார். விராட் கோலி (557 போட்டிகளில் 28,017 ரன்கள்) இரண்டாம் இடத்திலும், குமார் சங்கக்கார (594 போட்டிகளில் 28,016 ரன்கள்) மூன்றாம் இடத்திலும், ரிக்கி பாண்டிங் (560 போட்டிகளில் 27,483 ரன்கள்) நான்காம் இடத்திலும் உள்ளனர்.
இதே போன்று 28 ஆயிரம் ரன்களை விராட் கோலி 624 இன்னிங்சில் அதிலேகமாக எட்டி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்த மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் 644 இன்னிங்சில் எட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 5வது முறையாக கோலி 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.