புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி வெறும் 1 ரன்னில் ஸ்பின்னரான சான்ட்னரிடம் போல்டாகி வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணியும் சிக்கலில் மாட்டியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் ஆகியோரின் அபார பவுலிங்கால், நியூசிலாந்து அணியை 259 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய முடிந்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் 16 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி தொடங்கியது. 2வது நாள் ஆட்டத்தின் முதல் ஓவரையே நியூசிலாந்து அணி ஸ்பின்னரான சான்ட்னரிடம் கொடுத்தது. அவர் பக்கம் அட்டாக் செய்ய இன்னொரு பக்கம் டிம் சவுதி பவுலிங் செய்தார். 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சுப்மன் கில் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
நல்ல உயரம் இருக்கும் போது கூட இடதுகை ஸ்பின்னர் பவுலிங் செய்ய வந்தால், சுப்மன் கில் மிக எளிதாக தடுமாற தொடங்குவது அவருக்கு பின்னடைவாகவே தொடர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி களம் புகுந்தார். இதனைத் தொடர்ந்து சான்ட்னர் வீசிய அடுத்த ஓவரிலேயே விராட் கோலியும் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதிலும் ஃபுல் டாஸாக காலில் விழுந்த பந்தை ஸ்வீப் அடிக்கிறேன் என்ற பெயரில் விராட் கோலி போல்டாகி வெளியேறி இருக்கிறார். கொஞ்சம் கூட ஸ்பின்னரின் கைகளில் இருந்து வரும் பந்தை கவனிக்காமல், முன் கூட்டியே திட்டமிட்டு ஸ்வீப் அடிக்க முயற்சித்ததன் விளைவாகவே இந்த விக்கெட் அமைந்துள்ளது. இதனால் விராட் கோலி ஏமாற்றமடைந்து வெளியேறினார்.
2021ஆம் ஆண்டில் இருந்து ஆசிய மண்ணில் விராட் கோலி 26 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார். அந்த 26 இன்னிங்ஸ்களில் 21 இன்னிங்ஸ்கள் ஸ்பின்னர்களிடம் தான் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். அதிலும் இடதுகை ஸ்பின்னர்களிடம் மொத்தமாக 10 முறை ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். நாளுக்கு நாள் விராட் கோலியின் டிஃபென்ஸ் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மண்ணிலேயே ஸ்பின்னர்களிடம் விராட் கோலி திணறினால், அவர் ரன்கள் குவிக்கவே வாய்ப்புகள் கிடையாது. மேலும் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் 3 ஸ்பின்னர்களுடமே 89 முதல் 90 கிமீ வேகத்தில் தான் பவுலிங் செய்கிறார்கள். இந்திய ஸ்பின்னர்களின் வேகம் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், எதிரணி வீரர்கள் சரியான திட்டமிடலுடன் களமிறங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.