மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாம் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இன்று ராஜ்கோட்டில் விளையாடுகிறது. இந்த சூழலில், ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஆட்டத்தை வெல்லும் திறன் ரோகித் சர்மாவை விடச் சிறப்பானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிஃப் பாராட்டினார். முதல் ஒருநாள் போட்டியில் கோலியின் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து இவ்வா அவர் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் பெறும் ரன்களைப் பெரிய ஸ்கோராக மாற்றும் கோலியின் திறன் தான், அவர் ரோகித் சர்மாவை விட சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேனாக இருப்பதற்கான முக்கிய காரணி என்று கைஃப் குறிப்பிட்டார்.

யூடியூப் சேனலில் பேசிய கைஃப், "விராட் கோலி தனது தொடக்கங்களை பெரிய ஸ்கோராக மாற்றுகிறார். 30 அல்லது 40 ரன்கள் எடுத்தால், அவர் இறுதிவரை நின்று, போட்டியை வெல்வார். ஒருமுறை ஃபார்முக்கு வந்தால், தொடர்ந்து சிறப்பாக ஆடுவார். இதனால்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி எப்போதும் ரோகித் சர்மாவை விட முன்னணியில் இருக்கிறார்."
"கோலி தொடர்ந்து ரன்கள் குவித்து, பெரிய இன்னிங்ஸ் விளையாடுகிறார். முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி அவுட்டானபோது, தவறான ஷாட் ஆடிவிட்டதாகத் தலையை அசைத்ததைக் காணலாம்," என்றார். கோலியின் ஆட்ட மனநிலை, நல்ல தொடக்கங்களை வெற்றியாக மாற்றும் திறனே அவரை முன்னிலையில் வைத்துள்ளது என்று கூறினார்.
முதல் ஒருநாள் போட்டியில் கோலி தனது 54வது சதத்தைத் தவறவிட்டாலும், அவர் அடித்த 91 பந்துகளில் 93 ரன்கள், இந்தியாவுக்கு வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தது. சிறிய சரிவு பதட்டமான தருணங்களை உருவாக்கிய போதும், கோலியின் ஆட்டம் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றது.
கோலியின் இந்த அபாரமான ஃபார்ம், அணியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காயப் பிரச்சினைகளை இந்தியா சமாளிக்க உதவியுள்ளது. ராஜ்கோட்டில் நடைபெறும் இரண்டாம் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரைக் கைப்பற்றுஙம உத்வேகத்துடன் இந்திய அணி உள்ளது. ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் ரோகித் சர்மா உள்ள நிலையில், கோலி அவரை பின்னுக்கு தள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.