புனே: மிட்செல் சான்ட்னர் பந்து வீச்சில் விராட் கோலி பவுல்டு அவுட் ஆனார். இதுதான் அவரது கிரிக்கெட் வாழ்வின் மிக மோசமான ஆட்டமிழப்பு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். மும்பை லாபியை சேர்ந்தவர் என்பதால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விராட் கோலியை சீண்டி இருப்பதாக கோலி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும் நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஆடி வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி பேட்டிங்கில் மோசமாக சொதப்பி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராட் கோலி 9 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து மிட்செல் சான்ட்னர் பந்து வீச்சில் பவுல்டு அவுட் ஆனார்.
மிட்செல் சான்ட்னர் வீசிய ஃபுல் டாஸ் பந்தை அடிக்க நினைத்த விராட் கோலி பவுல்டு அவுட் ஆனார். பொதுவாக ஃபுல் டாஸ் பந்துகளை சந்திப்பது அனுபவ வீரர்களுக்கு எளிதான ஒன்றுதான். அப்படி மிக எளிமையான பந்தில் விராட் கோலி அவுட் ஆனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விராட் கோலி அவுட் ஆகி வெளியே சென்ற போது தலை குனிந்து மிகவும் சோகத்துடன் சென்றார். இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கும் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்வின் மோசமான ஷாட்டை ஆடியதாக தற்போது உணர்ந்து இருப்பார். அவருக்காக பரிதாபப்படுகிறேன். அவர் எப்போதுமே இந்திய அணிக்காக ரன் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் களத்துக்கு வருவார்." என கூறி இருக்கிறார்.
மஞ்ச்ரேக்கரின் இந்த பதிவு கோலியை கிண்டல் செய்யும் வகையில் இருப்பதாகக் கூறி கோலியின் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். மஞ்ச்ரேக்கர் மும்பை வீரர்களுக்காக லாபி செய்பவர் என சிலர் அவரை விளாசி உள்ளனர்.