வதோரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 91 பந்துகளை எதிர் கொண்டு 93 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த இன்னிங்ஸில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். இதன் மூலம் விராட் கோலி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 45 வது முறையாக ஆட்ட நாயகன் விருதை வென்றிருக்கிறார்.
விராட் கோலிக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 62 முறையும், ஜெயசூர்யா 48 முறையும் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளனர். இது குறித்து விருது வழங்கும் நிகழ்ச்சியில் கோலியிடம் பேசிய ஹர்ஷா போக்லே, இந்த விருதை எல்லாம் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த விராட் கோலி, இந்த விருதை எல்லாம் என்னுடைய அம்மாவுக்கு அனுப்பி விடுவேன். இதை அனைத்தும் அவர் பத்திரமாக ஒரு அறையில் வைத்திருப்பார். இதை பார்த்து அவர் பெருமைப்படுவார். என்னுடைய இந்த பயணத்தை திரும்பிப் பார்த்தால் அனைத்துமே கனவு நினைவானது போல் தான் எனக்கு இருக்கின்றது.
என்னுடைய திறமை என்னவென்று எனக்கு தெரியும். சில விஷயத்திற்காக நான் கடுமையாக உழைத்து இருக்கின்றேன். இதனால் தான் தற்போது நான் இந்த இடத்தில் இருக்கின்றேன். இறைவனும் எனக்கு பல விஷயங்களை தந்திருக்கிறார். இதற்காக நான் என்றும் நன்றியுணர்வு இருக்கின்றேன். நான் தற்போது விளையாடி வரும் போது எந்த ஒரு மைல் கல்லையும் நினைத்து விளையாடுவதில்லை . நான் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
இந்த கட்டத்தில் தான் அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும். ஏனென்றால் முக்கியமான விஷயம் அணிக்காக நாம் விளையாடி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான விஷயமே நான் மூன்றாவது வீரராக களமிறங்கும் போது அணி நெருக்கடியான சூழலில் இருந்தால் ஆக்ரோஷமான ஷாட்கள் இல்லாமல் கவுண்டர் அட்டாக் செய்ய வேண்டும்.
இன்று கூட நான் முதல் 20 பந்துகளை எதிர்கொண்ட பிறகு நல்ல ஒரு பார்ட்னர்ஷிப் அமைக்க முடியும் என்று நினைத்தேன். நான் களத்திற்கு வருகிறேன் என்பதற்காக எனக்கு முன்னால் இருக்கும் பேட்ஸ்மேன் அவுட் ஆகிறார் என்று ரசிகர்கள் கத்தி கொண்டாடுவது சரியல்ல. எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதை நான் தோனி விளையாடும்போதும் பார்த்திருக்கின்றேன்.
உங்களுக்கெல்லாம் நான் நன்றி உணர்வுடன் இருக்கின்றேன். இதை நான் ஒரு ஆசீர்வாதமாகத் தான் நினைக்கின்றேன். நீங்கள் சிரிக்கும் போது அது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது என்று விராட் கோலி கூறியுள்ளார்.