மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி 11 விக்கெட்கள் வீழ்த்தி இருந்த போதும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படாது என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு நீண்ட காலத்துக்கு பின் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். மொத்தம் 11 விக்கெட்களை வீழ்த்தி தனது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவு செய்து இருந்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரராக அவர் இருந்தார். இந்திய அணி தோல்வி அடைந்தாலும் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக ஆடியது அனைவரின் பாராட்டையும் பெற்றது. அவர் இந்திய அணியின் நிரந்தர ஸ்பின்னராக தொடர்ந்து வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது போட்டியிலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த மைதானத்தில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்பதால் இந்திய அணி அதிகபட்சம் இரண்டு ஸ்பின்னர்களை மட்டுமே களமிறக்கும். அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை அணியை விட்டு நீக்குவது ஏற்புடையதாக இருக்காது என்பதால் அவர்கள் இருவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்பின்னர்களாக பங்கேற்பார்கள்.
எனவே, வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்கு பதிலாக மூன்றாவதாக ஒரு வேகப் பந்துவீச்சாளர் அணியில் இடம் பெறக் கூடும். பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கக் கூடும்.