வதோதரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தாலும், ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தால் விலகிய நிலையில், தற்போது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் காயத்தால் அவதிப்பட்டு வருவது இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னரே, வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட இடுப்புப் பகுதி தசைப்பிடிப்பு காரணமாக ரிஷப் பண்ட் தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்றைய (ஜனவரி 11) போட்டியின் போது, மற்றொரு முக்கிய வீரரான வாஷிங்டன் சுந்தரும் அதே பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் எஞ்சியுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
நியூசிலாந்து இன்னிங்ஸின் போது 5 ஓவர்கள் மட்டுமே வீசிய சுந்தர், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக துருவ் ஜூரல் மாற்று ஃபீல்டராகச் செயல்பட்டார். அவர் மீண்டும் களத்திற்கு வரமாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்திய அணி சேஸிங்கில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, வலியையும் பொருட்படுத்தாமல் சுந்தர் பேட்டிங் செய்ய வந்தார். 7 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து, கே.எல். ராகுலுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
போட்டி முடிந்த பிறகு பேசிய கே.எல். ராகுல், "சுந்தர் பேட்டிங் செய்ய வந்தபோது, அவரால் ஓட முடியாது என்பது எனக்குத் தெரியாது. முதல் இன்னிங்ஸில் அவருக்கு லேசான வலி இருந்ததை நான் அறிவேன். ஆனால், அது இவ்வளவு தீவிரமானது என்று எனக்குத் தெரியாது. அவர் பந்தை நன்றாக ஸ்ட்ரைக் செய்தார். ஆனால் ரன் ஓட முடியாமல் அவர் தவித்ததைப் பார்த்தபோதுதான் காயத்தின் தன்மையை உணர்ந்தேன்" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
போட்டி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் சுப்மன் கில், "வாஷிங்டன் சுந்தருக்கு இடுப்பில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் போட்டி முடிந்த கையோடு ஸ்கேன் பரிசோதனைக்குச் செல்லவுள்ளார். முடிவுகள் வந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை தெரியும்" என்று உறுதிப்படுத்தினார்.
2026 டி20 உலகக்கோப்பை வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. உலகக்கோப்பைக்கான அணியில் வாஷிங்டன் சுந்தர் முக்கிய அங்கமாக இருக்கிறார். இந்தச் சூழலில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அணி நிர்வாகத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை காயம் பெரிதாக இருக்கும் பட்சத்தில், உலகக்கோப்பையில் அவர் பங்கேற்பது சிக்கலாகலாம்.
இதுவரை பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்தத் தொடரில் சுந்தர் தொடர்ந்து விளையாடுவது கடினம் என்றே தெரிகிறது. அடுத்தடுத்து இரண்டு முக்கிய வீரர்கள் காயமடைந்தது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.