சென்னை : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதன் மூலம் இந்திய அணி தற்போது பலமான நிலையில் இருக்கின்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் தற்போது அசத்தியிருக்கிறார்.
வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக 2017 ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் அவ்வப்போது ஏற்பட்ட காயம் காரணமாக பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த சூழலில் ஒரே நாளில் உலக அளவில் வாஷிங்டன் சுந்தர் ஃபேமஸ் ஆகிவிட்டார்.

இந்த தருணத்தில் வாஷிங்டன் சுந்தர் என பெயர் வந்ததற்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். வாஷிங்டன் சுந்தரின் தந்தையின் பெயர் மணி சுந்தர். இவர் சிறு வயதில் தமிழக கிரிக்கெட் வாரியத்தின் டிவிஷன் கிரிக்கெட்டில் விளையாடி வந்திருக்கிறார். ஏழ்மை காரணமாக வாஷிங்டன் சுந்தர் இன் தந்தை மணி சுந்தர் பாதிக்கப்பட்டபோது, அவருடைய வீட்டின் அருகே வசித்த பி.டி வாஷிங்டன் என்ற ராணுவ வீரர் தான் மணி சுந்தருக்கு உதவி இருக்கிறார்.
பள்ளி படிப்பு மற்றும் கிரிக்கெட்டுக்கான உபகரணங்கள், ஜெர்சி என அனைத்துமே மணி சுந்தருக்கு பி.டி வாஷிங்டன் என்பவர் தான் வாங்கி கொடுத்திருக்கிறார். இந்த சூழலில் பி.டி. வாஷிங்டன் 1999 ஆம் ஆண்டு உயிரிழந்திருக்கிறார். அதன் பிறகு தான் வாஷிங்டன் சுந்தர் பிறந்துள்ளார்.
ஹிந்து முறைப்படி வாழ்ந்தாலும், தமக்கு எண்ணற்ற உதவிகளை வாஷிங்டன் என்ற அந்த ராணுவ வீரர் செய்து தான் நன்றியின் காரணமாக தனது மகனுக்கு வாஷிங்டன் சுந்தர் என்று பெயர் வைத்திருக்கிறார். ரஞ்சி கிரிக்கெட் அருகே வரை மணி சுந்தர் சென்று தமிழக அணியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.
ஆனால் தனது தந்தையின் கனவை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் வாஷிங்டன் சுந்தர் உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் வீரராக தற்போது மாறி இருக்கிறார். வாஷிங்டன் சுந்தர் மட்டும் அல்லாமல் அவருடைய சகோதரி சைலஜாவும் கிரிக்கெட் வீராங்கனையாக இருந்து வருகிறார். செய்த உதவியை மறக்கும் மக்கள் மத்தியில் நாம் வாழ்ந்து வரும் நிலையில் இறந்த ஒருவரின் நன்றியை மறக்காமல் அவருடைய பெயரை தனது மகனுக்கு வைத்திருக்கும் மணி சுந்தர் உண்மையிலே கிரேட் தான்.