புனே : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஒரே இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதன் மூலம் வாஷிங்டன் சுந்தர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் திரும்பி தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்.
இந்த சூழலில் முதல் டெஸ்டில் கூட வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. எனினும் ரஞ்சிப் போட்டியில் அபாரமாக விளையாடிய பிறகு கம்பீரின் வற்புறுத்தலின்படி வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது டெஸ்ட் தேர்வு செய்யப்பட்டு தற்போது அபாரமாக விளையாடி இருக்கிறார்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், நான் முதல் டெஸ்ட் போட்டியில் அணியிலே இடம்பெறவில்லை. தற்போது வெளியில் இருந்து தான் நான் அணிக்கு வந்து உடனடியாக பிளேயிங் லெவனின் தான் இடம்பெற்று விளையாட வாய்ப்பு கிடைத்தது. பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று நான் பந்து வீசும் போது துல்லியமாக செயல்பட வேண்டும் என நினைத்தேன். எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் எந்த பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுகிறோம் என்றெல்லாம் பார்க்காமல் துல்லியமாக செயல்பட வேண்டும் என நினைத்தேன். இது கடவுளின் திட்டமாக நான் நினைக்கின்றேன். இந்த ஏழு விக்கெட்டுகளும் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சரியான இடத்தில் ஆடுகளத்தில் பந்தை வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும். நான் பந்து வீசும் வேகத்தை கொஞ்சம் மாற்றி வீசினேன்.
ஆடுகளம் முதல் நாளில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என நினைத்தேன். ஆனால் முதல் ஸ்செஷனில் அவ்வாறு இருந்தது. ஆனால் போகப் போக பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி இருந்தது. நான் வீழ்த்திய 7 விக்கெட்டுகளில் ரச்சன் ரவீந்திரா விக்கெட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் ரச்சின் ரவீந்திரா அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவருடைய விக்கெட் வீழ்த்தி இருக்கிறேன். இதேபோன்று விக்கெட் ஆட்டத்தின் திறப்பு முறையாக அமைந்திருக்கிறது என நம்புகிறேன் என்று வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.