புனே : இந்தியா, நியூசிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஒரே இன்னிங்ஸில் ஏழு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய மேஜிக்கை வெளிப்படுத்தி தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்திருக்கிறார்.
வாஷிங்டன் சுந்தர் இளம் வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடினாலும் பலமுறை காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இந்த சூழலில் தன்னுடைய கடினமான காலகட்டத்தை 100 சதவீதம் உழைப்பின் மூலம் கடந்து வெற்றி பெற்று இருப்பதாக வாஷிங்டன் சுந்தரின் சகோதரியும், கிரிக்கெட் வீராங்கனையுமான சைலஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மைக்கேல் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், கிரிக்கெட்டில், முன்பெல்லாம் உடல் தகுதி என்பது பெரிய விஷயம் கிடையாது. ஆனால் தற்போது டி20 கிரிக்கெட் காலத்தில் உடல் தகுதி என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்த போதெல்லாம் மனம் தளராமல் 100% உழைப்பை வெளிப்படுத்தினார்.
எப்போதுமே பயிற்சியை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் மேற்கொண்டதால் தான் இன்று அவரால் சாதிக்க முடிந்தது என்று நினைக்கின்றேன். வாஷிங்டன் சுந்தரை சிறு வயதில் இருந்து நான் பார்த்திருக்கிறேன். தன்னுடைய கிரிக்கெட்டை எப்படி மெருகேற்ற முடியும் என்பதில் கவனமாக இருப்பார்.கிரிக்கெட்டுக்கு என்ன தேவைப்படுமோ, ஆட்டத்திற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதில் எல்லாம் கொஞ்சமும் கூட வாஷிங்டன் சுந்தர் சமரசம் செய்தது கிடையாது.
ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் 100% பங்களிப்பை வாஷிங்டன் சுந்தர் கொடுப்பார். இதனால்தான் கம்பேக் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தரால் சிறப்பாக செயல்பட முடிந்தது. வாஷிங்டன் சுந்தர் நாம் எதிர்பார்ப்பதை விட அபாரமாக செயல்படக்கூடிய திறமை உடைய வீரர் என்று சைலஜா கூறினார். கடந்த முறை வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்காமல் தவறவிட்டதற்கு அவருடைய தந்தை மணி சுந்தர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனால் இம்முறை 10 விக்கெட் ஏன் எடுக்கவில்லை என்று தந்தை ஏதேனும் கேள்வி கேட்டாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சைலஜா, நன்றாக படிக்கும் மாணவரிடம் ஒரு மார்க் ஏன் குறைந்தது என்று கேள்வி எழுப்புவது போல், தான் தனது தந்தை அப்போது சதம் ஏன் மிஸ் ஆனது என்று கேட்டார்.
ஆனால் இன்று வாஷிங்டன் சுந்தர் ஒரே இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை எடுத்ததை நினைத்து ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் இருக்கின்றோம். டெஸ்ட் கிரிக்கெட் தான் கிரிக்கெட்டின் உண்மையான வடிவம். அது ஒவ்வொரு வீரரின் திறமையும் பரிசோதிக்கும். அந்த வகையில் வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று செயல்பட்ட விதம் எங்களுக்கு ஒரு பெருமையான விஷயமாக இருக்கின்றது என்று சைலஜா கூறினார்.
இதேபோன்று ரசிகர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் உடைய இடத்தை வாஷிங்டன் சுந்தர் நிரப்புவார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த வாஷிங்டன் சகோதரி சைலஜா, அஸ்வின் ஒரு லெஜன்ட். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
அவருடைய இடத்தை நிரப்புவாரா என்று நாம் இப்போது ஒப்பிட்டு கேட்பது தவறு என்று நினைக்கின்றேன். அஸ்வினும் வாஷிங்டன் சுந்தரும் வெவ்வேறு விதமான வீரர்கள். அஸ்வின் போன்ற சாதனைகளை வாஷிங்டன் சுந்தர் செய்ய கடவுளின் ஆசீர்வாதமும் இருக்க வேண்டும். இதனால் அஸ்வினுடன் ஒப்பிட்டு வாஷிங்டன் சுந்தருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது.
அஸ்வின் பல சாதனைகளை படைத்த கிரிக்கெட் வீரர். வாஷிங்டன் சுந்தர் தற்போது தான் வளர்ந்து வருகிறார். எனவே இப்போது இருவரையும் ஒரே தராசில் வைத்து நான் நிச்சயம் பார்க்க மாட்டேன். இன்னும் நிறைய ஆண்டுகள் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும். இன்னும் நிறைய போட்டிகளில் இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருக்கிறது.
அஸ்வினுடைய இடத்தை நிரப்புவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்கான அழுத்தத்தை ஊடகங்கள் வாஷிங்டன் சுந்தர் மீது தற்போது போட வேண்டாம் என நினைக்கின்றேன் என்று சைலஜா கூறியுள்ளார். இதேபோன்று வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட் விளையாடுவதை நாம் சிறுவயதில் இருந்து பார்க்கின்றேன். எப்போதெல்லாம் ஒரு அணி தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் தனது பந்து வீச்சால் அணியை சரிவிலிருந்து மீட்க கடுமையாக போராடுவார்.
அந்த குணம் வாஷிங்டன் சுந்தரிடம் நிறைய இருக்கின்றது என்றும் சைலஜா குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது பிசிசிஐ நடத்தும் மகளிருக்கான உள்நாட்டு டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக சைலஜா கொல்கத்தாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.