பெங்களூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2வது நாள் ஆட்டத்திற்கான வானிலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கவிருந்தது. ஆனால் நேற்று காலை முதலே பெங்களூரில் கனமழை பெய்து வந்தது. இருந்தாலும் சின்னச்சாமி மைதானத்தில் சிறந்த வடிகால் அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் மழை நின்ற பின், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஆட்டத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேநீர் இடைவேளை வரையிலும் மழை நிற்கவில்லை. நடுவர்கள் மற்றும் இந்திய அணி வீரர்கள் அடிக்கடி மைதானத்திற்கு வந்து சோதனை செய்த போதும், மழை நிற்பதாக தெரியவில்லை. இதனால் மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் 2வது நாள் ஆட்டத்திற்கான நேரத்தையும் மாற்றுவதாக அறிவித்தனர். 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியை 9.15 மணிக்கே தொடங்குவதாகவும், 4.30 மணிக்கு முடிவடையும் நாளினை கூடுதலாக 15 நிமிடங்கள் அளித்து 4.45 மணிக்கு நிறைவு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இழந்த ஓவர்களை ஓரளவிற்கு சரிகட்ட முடியும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்திற்கான வானிலை நிலவரம் ரசிகர்களிடையே சோகத்தை அளித்துள்ளது. ஏனென்றால் 2வது நாள் ஆட்டத்திலும் பெங்களூரில் கனமழை தொடரும் என்று வானிலை தகவல்கள் வெளியாகியுள்ளது. சின்னச்சாமி மைதானம் அமைந்துள்ள பகுதியில் 40 சதவிகிதம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், வானம் மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2வது நாள் ஆட்டம் நடக்குமா என்ற ரசிகர்கள் பலரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டால், ஆட்டம் நிச்சயம் டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளது. நியூசிலாந்து அணி ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற போதும் 5 நாட்களும் மழையால் ஆட்டம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.