துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கும் குரூப் ஏ பிரிவு போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கிடைக்கும் வெற்றி தோல்வியை பொறுத்து இந்த இரண்டு அணிகளின் அரையிறுதிக்கான எதிரணி யார்? என்பது தெரியவரும்.
குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கின்றன. இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.

இந்தப் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு டாஸ் போடப்படும். மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி துவங்கும். இந்த போட்டியை நேரலையில் பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் போட்டிகளை காணலாம்.
மொபைல் மற்றும் இணையதளத்தில் ஸ்ட்ரீமிங் மூலம் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் செயலி அல்லது ஜியோ ஹாட்ஸ்டார் இணையதளத்தில் இந்த போட்டியை காணலாம்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டியே குரூப் சுற்றில் கடைசி போட்டி ஆகும். அடுத்து மார்ச் 4 அன்று முதல் அரையிறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. மூன்று நாட்கள் இடைவெளியில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது.
குரூப் சுற்றின் கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா, அடுத்த இரண்டு நாட்களில் அரையிறுதியில் விளையாட இருப்பதால் இந்திய வீரர்களுக்கு இந்த போட்டியில் காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற அவசியமும் உள்ளது. மறுபுறம் இந்திய அணி இப்போதே அரையிறுதிக்கான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
இந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு முன்பு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் இந்தப் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகமும் உள்ளது. முகமது ஷமிக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.