மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடியும் முன்பாக அவசர, அவசரமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அது ஏன்? என்பது பற்றி தற்போது சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் இரண்டாம் நாள் முடிவில் தோல்வி அடையும் நிலையில் இருந்தது. அதனால் இந்த டெஸ்ட் தொடரை இழக்கும் நிலையில் இருந்தது.

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்கள் எடுத்து 5 விக்கெட் இழப்புடன் இருந்தது. அப்போதே நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்று விட்டது. மறுநாளும் நியூசிலாந்து அணி கூடுதல் ரன் சேர்த்து இந்திய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
மூன்றாவது நாள் அன்றே கூட இந்திய அணி ஆல் அவுட் ஆகி தோல்வி அடையலாம் என்பதை ஊகித்து இரண்டாவது நாளின் இரவிலேயே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி அவசரகதியில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து எந்த முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை. திடீரென இரவு 10 மணி அளவில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள டி20 தொடருக்கான அணியும், இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டது.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்ற உள்ள இந்திய அணியின் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்கள் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் இடம் பெற்றனர். இதில் தான் ஒரு விஷயம் உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துவிட்டால் அதன் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும் போது கடுமையான விமர்சனம் எழும்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சரியாக ஆடாத வீரர்களை இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதாலேயே பிசிசிஐ மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா பதறிப் போய் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோல்வி அடைவதற்கு முந்தைய தினத்தின் இரவில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் தற்காலிகமாக இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் விமர்சனங்களில் இருந்து தப்பி உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் இந்திய வீரர்கள் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்கொண்டே ஆக வேண்டி இருக்கும்.