பெங்களூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜ் விக்கெட் வீழ்த்த திணறி வருகின்றனர். அது ஏன்? என்பது பற்றி விமர்சகர்கள் சில விஷயங்களை சுட்டிக் காட்டி உள்ளனர்.
பெங்களூரில் நடந்து வரும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்து இரண்டாவது நாள் அன்று போட்டி துவங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அப்போது சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் மாட் ஹென்றி, வில்லியம் ஓரூர்கி மற்றும் டிம் சவுத்தி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் ஆடிய போது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. அது ஏன்? இந்திய வேகப் பந்துவீச்சாளர்களால் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் போல பந்தை அதிகம் ஸீம் செய்யவோ, பவுன்ஸ் செய்யவோ முடியவில்லை. அது ஏன்?
பந்தின் ஸீம் மூவ்மென்ட் முதல் நாள் ஆட்டத்தின் 20 அல்லது 30 ஓவர்கள் மட்டுமே இருக்கும். புதிய பிட்ச்சில் மட்டுமே அது சாத்தியம். அதன் பின் பந்து அதிகம் ஸீம் ஆகாது. அதனால் தான் இந்திய அணி 31.2 ஓவர்களில் 46 ரன்களில் ஆட்டம் இழந்த பின் வந்த நியூசிலாந்து அணி அதிக விக்கெட்களை இழக்கவில்லை.
அதேபோல இந்திய வேகப் பந்துவீச்சாளர்களால் ஏன் பந்தை பவுன்ஸ் செய்ய முடியவில்லை? என்ற கேள்வியும் உள்ளது. அதற்கு காரணம் உயரம் தான். இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜ் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை விட சில இன்ச் உயரம் குறைவு என்பதால் அவர்களால் எளிதாக அதிக பவுன்ஸ் செய்ய முடியவில்லை.
மேலும், நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்கள் அணியின் உயரமான வேகப் பந்துவீச்சாளர்கள் வலைப் பயிற்சியில் தங்களுக்கு வீசும் பவுன்ஸ் பந்துகளை சந்தித்து பழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். உள்ளூர் போட்டிகளிலும் இதே போன்ற உயரமான பந்துவீச்சாளர்களை அதிகம் சந்தித்து இருப்பார்கள். அதனால் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் வீசிய சில பவுன்சர் பந்துகள் நியூசிலாந்து வீரர்களை பாதிக்கவில்லை.
அதே சமயம், நியூசிலாந்து வீரர்களுக்கு சுழற் பந்துவீச்சாளர்களை சந்திப்பதில் சிரமம் உள்ளது. மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன் நியூசிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்து இருந்தது. அதில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா 3, அஸ்வின் 1, குல்தீப் 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். பும்ரா, சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.