துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி தோற்க வேண்டும் என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. ஏனென்றால் அரையிறுதி சுற்றில் இந்திய அணி பலம் குறைந்த அணியாக கருதப்படும் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி எளிதாக இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. ஏற்கனவே குரூப் ஏ பிரிவில் இருந்து நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. குரூப் பி பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

இருந்தாலும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதற்கு இந்த போட்டியின் முடிவு அடிப்படையில்தான் அரையிறுதி ஆட்டத்தில் எந்த அணியுடன் யார் மோதுவார்கள் என்பது முடிவு செய்யப்படும். அதாவது குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், குரூப் பி பிரிவில் 2வது இடம் பிடிக்கும் அணியும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் விளையாடுவார்கள்.
அதேபோல் குரூப் ஏ பிரிவில் 2வது இடம் பிடிக்கும் அணியும், குரூப் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் 2வது அரையிறுதியில் விளையாடும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி விளையாடும் அரையிறுதி ஆட்டம் துபாய் மைதானத்தில் நடக்கும் என்று முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவை பொறுத்து இந்திய அணியை எதிர்த்து விளையாடும் அணி துபாய் பயணிக்கும்.
இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர். ஏனென்றால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தால், குரூப் ஏ பிரிவில் 2வது இடத்தில் நிறைவு செய்யும். அப்படி நடந்தால், அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடும்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாடி வருகிறது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தான் மண்ணிலேயே விளையாடி இருக்கிறது. இதனால் அரையிறுதி போட்டியில் எளிதாக தென்னாப்பிரிக்காவை இந்திய அணியால் வீழ்த்த முடியும் என்று பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஒருவேளை ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றால், 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் துபாய் மைதானத்தில் ஆடிய அனுபவம் மூலமாகவும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முடியும் என்று கருதப்படுகிறது.
அதேபோல் இந்திய அணி எப்போதும் ஒரேயொரு தோல்வியுடன் அரையிறுதி சுற்றுக்கு செல்வது வீரர்களுக்கு கூடுதல் எச்சரிக்கையை கொடுக்கும். ஏனென்றால் அந்த தோல்வி இந்திய அணியில் இருக்கும் ஓட்டையை வீரர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறும். அதற்கேற்ப இந்திய அணி நாக் அவுட் போட்டிகளில் கூடுதல் சிறப்பாக செயல்பட முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.