துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? அல்லது கடைசி வரை சக வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் வேலையை தான் செய்வாரா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல். ராகுல் இடம் பெற்று இருக்கிறார். இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஆடிய நான்கு போட்டிகளிலும் கே.எல். ராகுலே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தார். அவரது செயல்பாடுகளும் சிறப்பாகவே உள்ளது.

ரிஷப் பண்ட் அந்த நான்கு போட்டிகளிலும் வாய்ப்பு பெறவில்லை. அவர் மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இறுதிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், ஏதேனும் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே அது சாத்தியம்.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கு முழங்காலில் லேசான காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும், அது கவலைக்குரிய வகையில் இல்லை எனவும், விராட் கோலி நிச்சயமாக பேட்டிங் செய்வார் எனவும் கூறப்படுகிறது. எனவே, ரிஷப் பண்ட் அவருக்கு பதிலாக விளையாடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்திய அணியில் நிச்சயமாக பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட மாட்டார். மாறாக, ஏதேனும் ஒரு வீரருக்கு காயமோ, உடல் நல பிரச்சனைகளோ ஏற்பட்டால் மட்டுமே ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஏனெனில், இந்திய அணி இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாய் மைதானத்தில் தான் தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடி உள்ளது. அதில் பேட்டிங் வரிசையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது இந்திய அணியின் வெற்றிகளுக்கும் முக்கிய காரணமாகவும் அமைந்து இருக்கிறது.
அப்படி வெற்றிகளை அளித்த பேட்டிங் வரிசையை மாற்றுவதற்கு இந்திய அணி நிர்வாகம் நிச்சயமாக நினைக்காது. எனவே ரிஷப் பண்ட்டுக்கு இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமே.