லண்டன் : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய பயிற்சிப் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது.
இந்தப் போட்டியில் ஒரு சுவாரசியம் நடைபெற்றது. தோனி நீண்ட காலம் கழித்து விக்கெட் கீப்பிங் செய்யாமல் பீல்டிங் செய்தார். தினேஷ் கார்த்திக் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றார்.

2019 உலகக்கோப்பை தொடருக்கு முன் நடைபெறும் இந்த பயிற்சிப் போட்டி அங்கீகரிக்கப்பட்ட ஒருநாள் போட்டி அல்ல. இந்தப் போட்டியில் சில முக்கிய வீரர்கள் பீல்டிங் செய்யாமல், பேட்டிங் மட்டுமே செய்து விட்டு ஓய்வு எடுப்பார்கள். ரன்கள், விக்கெட்கள் என எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
அதை பயன்படுத்தி மூத்த வீரர் தோனி, பேட்டிங் மட்டும் செய்துவிட்டு, தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் பயிற்சி பெறும் வகையில் தான் ஓய்வு எடுத்திருக்கலாம். ஆனால், தோனி கீப்பிங் செய்யாத நிலையிலும், களத்தில் பீல்டிங் செய்தார்.
தோனி பவுண்டரி எல்லை அருகே நின்று பீல்டிங் செய்ததை கண்ட ரசிகர்கள் "தோனி, தோனி" என கூச்சலிட்டனர். இணையத்திலும் தோனி பீல்டிங் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங்கில் சில கேட்ச்களை கோட்டை விட்டு ஏமாற்றம் அளித்தார். பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக் 4 ரன்களும், தோனி 17 ரன்களும் மட்டுமே எடுத்து ஏமாற்றினர். இரண்டாவது பயிற்சிப் போட்டியிலும் தோனி விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.