பெங்களூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இதற்கு ரோஹித் சர்மா செய்த இரண்டு தவறுகளே முக்கிய காரணம் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முழுவதுமாக தடைபட்ட நிலையில் இரண்டாம் நாள் அன்று டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தவறான முடிவை எடுத்தார். அதுவே அவர் செய்த முதல் மற்றும் பெரிய தவறு.
மழையின் காரணமாக மூன்று நாட்களாக மூடி வைக்கப்பட்டு இருந்த பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதை சரியாக கணிக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனால் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 31 ஓவர்களில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய பேட்ஸ்மேன்களால் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் பந்தை சரியாக அடிக்க முடியவில்லை. பேட்ஸ்மேன்களால் ஏன் ஸ்விங் ஆகும் பந்துகளில் ரன் சேர்க்க முடியவில்லை? ஏன் ஸ்விங் பந்துகளில் விக்கெட்களை பறிகொடுத்தார்கள்? என்பதும் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விஷயம்.
அடுத்து இந்திய அணி பந்து வீசிய போது மேலும் ஒரு அழுத்தம் ஏற்பட்டது. நியூசிலாந்து அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்ததால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்த 31 ஓவர்களையும் அவர்களே வீசினார்கள். ஒரு ஓவரை கூட சுழற் பந்துவீச்சாளர்கள் வீசவில்லை. ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா பெங்களூர் பிட்ச்சில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஒத்துழைப்பு இருக்கும் எனக் கருதி இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார்.
ஆனால், அது பலன் அளிக்கவில்லை. இந்திய அணி பந்துவீச்சிலும் தடுமாறியதால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் எடுத்தது. குறிப்பாக அஸ்வின் மற்றும் குல்தீப் ஓவர்களில் சராசரியாக 5 ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இருந்து இருந்தால் இந்தியா அதை பயன்படுத்தி நியூசிலாந்து அணியை அச்சுறுத்தி இருக்க முடியும்.
இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் பதிலடி தந்த இந்திய அணி 462 ரன்கள் எடுத்தது. சர்ஃபராஸ் கான் 150 ரன்களும், ரிஷப் பண்ட் 99 ரன்களும் எடுத்து இருந்தனர். ஆனால், அது மட்டுமே நியூசிலாந்து அணியை வீழ்த்த போதுமானதாக இல்லை. நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஐந்தாம் நாள் அன்று அந்த இலக்கை நியூசிலாந்து எளிதாக எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.