அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ஆர்ஸ்தீப் சிங் ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் சமீபிரதாய ஆட்டமாக இது நடைபெற்றது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ஓமன் அணி விளையாடியது. ஒரு கட்டத்தில் ஓமன் அணி வெற்றிக்கு 16 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட கைவசம் 9 விக்கெட் உடன் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வெற்றியின் அருகே வந்தது.

அப்போது ஹர்திக் பாண்டியா பிடித்த ஒரு கேட்ச் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங், விநாயக் சுக்லா என்ற ஓமன் கிரிக்கெட் வீரர் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச t20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதற்கு முன்பு சாகல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 96 விக்கெட் எடுத்து முதலிடத்தில் இருந்த நிலையில், அர்ஷிப் சிங் அவர்களை முந்தி இந்த சாதனையை படைத்திருக்கிறார். 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற ஆர்ஸ்தீப் சிங் முக்கிய காரணமாக இருந்தார். மேலும் 2024 ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் என்று விருதையும் ஆர்ஸ்தீப் கைப்பற்றி இருந்தார்.
தற்போது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார். இந்த சாதனையை அவர் 64 போட்டிகளில் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 80 போட்டியில் விளையாடியுள்ள சாகல் 96 விக்கெட்டுகளையும், 117 போட்டிகள் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா 96 விக்கெட் களையும் வீழ்த்தினர்.
72 போட்டிகளில் விளையாடிய பும்ரா 92 விக்கெட்டு களையும், 87 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1952 ஆம் ஆண்டு வினோ மான்கட் இந்தியாவுக்காக முதல் முறையாக 100 விக்கெட் வீழ்த்தி இருந்தார். கபில் தேவ் 1986 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக முதல்முறையாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.இந்த நிலையில் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2025 ஆம் ஆண்டு ஆர்ஸ்தீப் சிங் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்