மும்பை: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 190 ரன்கள் இலக்கை நிர்ணயித்திருக்கிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வேண்டும் என்பதற்காக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக களம் இறங்கிய கில் 8 பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார். இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடி காட்டினர்.

முதலில் பொறுப்பாக விளையாடிய சாம்சன் பின்னர் பவுண்டரி சிக்ஸர் என விரட்டினார். மறுமுனையில் 5 பவுண்டரி, இரண்டு சிக்சர் என 15 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னில் எடுத்திருந்தபோது மறுமுனையில் நின்ற நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
நடுவரிசையில் இன்று விளையாடிய அக்சர் பட்டேல் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரியும், மூன்று சிக்சர் அடங்கும். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டி அணியை நல்ல இலக்கிற்கு கொண்டு சென்றார்.
திலக் வர்மா 18 பந்துகளின் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிவம் துபேவும் 5 ரன்களில் வெளியேறினார். இந்த ஆட்டத்தில் கேப்டன் சூரிய குமார் பேட்டிங் செய்ய வராமல் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து ஒதுங்கி கொண்டார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.