மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சூப்பர் 4 சுற்றுக்கு ஏற்கனவே இந்திய அணி தகுதி பெற்ற நிலையில், சமிபிரதாய ஆட்டமாக இது நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா விளையாடிய இரண்டு போட்டிகளுமே முதலில் தான் பந்து வீசியது.
இதனால் இரண்டாவது பந்துவீசி பனிப்பொழுதில் எவ்வாறு ரன்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்திய அணி இன்று இந்த முடிவை எடுத்தது. அது மட்டுமல்லாமல் 20 ஓவர் பேட்டிங் செய்வதன் மூலம் இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே இன்று பேட்டிங் அனுபவத்தை பெற முடியும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கின்றோம். நாங்கள் இதுவரை இந்த தொடரில் முதலில் நாங்கள் பேட் செய்யவில்லை. இதனால் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம். எங்கள் அணியின் பேட்டிங் பலத்தை நாங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும்.
இதனால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்பு எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல பழக்க வழக்கங்களை தொடர்ந்து கிரிக்கெட்டில் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆடுகளமும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஒன்று ஹர்ஷித்ரானா, இன்னொருவர் யார் என்று எனக்கு உண்மையிலே மறந்துவிட்டது.
நான் இருங்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்கின்றேன். கடவுளே ரோகித் சர்மா போல் நானும் தற்போது மறந்து வருகின்றேன். எனக்கு இன்னொரு நபர் யார் என்று ஞாபகத்தில் வரவில்லை என்று கூறினார்.( இரண்டாவது நபராக ஆர்ஸ்தீப் சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது). இதனால் வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ராவுக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து பேசிய ஓமன் அணி கேப்டன் ஜத்தேந்தர் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதை நாங்கள் நல்ல ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்வோம். இந்த வாய்ப்பை எங்களுடைய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன். எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்று ஜத்தேந்தர் தெரிவித்துள்ளார்.