அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் தொடர்ந்து தடுமாறி வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. கில், கடந்த ஒரு ஆண்டுகளாக சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் மட்டும்தான் விளையாடி வந்தார்.
கடந்த டி20 உலக கோப்பையில் கூட சுப்மன் கில் மெயின் அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக கில், சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக அவருக்கு டி20 அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.கில் அணியில் சேர்க்கப்பட்ட போது இது தேவையில்லாத வேலை என்றும் இதனால் அணியில் இருக்கும் பேலன்ஸ் அடிவாங்கும் என்று பலரும் விமர்சித்து இருந்தனர்.

இதன் காரணமாக தொடக்க வீரராக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் தற்போது நடுவரிசைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கில், அபாரமாக விளையாடிய நிலையில் அதேபோல் ஒரு பார்மை ஆசிய கோப்பை தொடரிலும் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் யுஏஇ அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் எடுத்திருந்த கில் பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் பத்து ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த தருணத்தில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கில்லுக்கு முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதில் அவர் பட்டையை கிளப்பி பார்முக்கு திரும்பவார் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அவர் வெறும் 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு வெறும் ஐந்து ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் வெறும் 62 தான் இருந்தது. ஆனால் மறுமுனையில் அபிஷேக் ஷர்மா தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடி 5 பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 15 பந்துகளின் 38 ரன்கள் எடுத்தார்.
அதிவிரைவாக அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அபிஷேக் சர்மா பெவிலியன் திரும்பினார்.இதனால் இந்திய அணி 72 ரன்கள் இரண்டு விக்கெட் இழந்து தடுமாறி இருக்கிறது. ஆட்டத்தின் 1.3 வது ஓவரிலே கில் ஆட்டம் இழந்தார். சஞ்சு சாம்சன் மூன்றாவது வீரராக இன்று ஆட்டத்தில் களமிறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.