கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பையைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. வயிற்றுத் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, தற்போது குணமடைந்து கொழும்பு வந்தடைந்தார்.
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடாத நிலையில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாட வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில், அவர் இந்திய அணியுடன் கொழும்பு வந்துள்ளது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் கொழும்பு கிளம்புவதற்கு முன், பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது. அதில், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மாவிடம் "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்கிறார். அதற்கு அபிஷேக் சர்மா, "பருப்பு சாதம்.. நல்லாயிருக்கு. நான்? நல்லா இருக்கேன்" என்று புன்னகையுடன் பதிலளிக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அபிஷேக் சர்மா மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருப்பதைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அபிஷேக் சர்மாவுடன் அவரது பெற்றோரும் கொழும்பு வந்துள்ளனர். சிறுவயதிலிருந்தே அபிஷேக்கின் பயிற்சியாளராக இருந்து வரும் அவரது தந்தை ராஜ்குமார் சர்மா, எப்போதும் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். கடந்த ஆசியக் கோப்பையின் போதும் அவர்கள் துபாயில் இருந்தனர். மகனுக்கு ஆதரவளிப்பதற்காக அவர்களும் கொழும்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் சர்மா அணிக்குத் திரும்பியிருந்தாலும், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. சனிக்கிழமை மாலை நடைபெறும் வலைப்பயிற்சியில் அவரது உடற்தகுதி சோதிக்கப்படும். அதில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆடும் லெவனில் சேர்க்கப்படுவார்.
ஒருவேளை அபிஷேக் சர்மாவால் விளையாட முடியாவிட்டால், சஞ்சு சாம்சன் மீண்டும் தொடக்க வீரராகக் களமிறக்கப்படலாம் அல்லது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக வலம் வரும் அபிஷேக் சர்மா, இதுவரை 38 போட்டிகளில் 1297 ரன்களைக் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 194.74 ஆக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 110 ரன்களை எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 74 ஆகும்.
இந்திய அணியின் முக்கிய வீரரான அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.