கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, நாளை (பிப்ரவரி 15) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆனால், ரசிகர்களின் இந்தத் எதிர்பார்ப்பில் இடியை இறக்கும் வகையில் வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. நாளைய போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எழும் மிகப்பெரிய கேள்வி, "ஒருவேளை மழை பெய்தால் போட்டிக்கு மாற்று நாள் ஒதுக்கப்பட்டுள்ளதா?" என்பதுதான்.

ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றம் என்னவென்றால், 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டிகளுக்கு மாற்று நாள் எனப்படும் 'ரிசர்வ் டே' கிடையாது. ஐசிசி விதிமுறைகளின்படி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மட்டுமே மழை பெய்தால் மறுநாள் ஆட்டத்தைத் தொடரும் வசதி உள்ளது.
லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் அந்தந்தத் தேதியிலேயே முடிக்கப்பட வேண்டும். எனவே, இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்குத் தனியாக மாற்று நாள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
வானிலை மோசமாக இருந்தால், போட்டி அதிகாரிகளின் முதல் முயற்சி ஓவர்களைக் குறைத்து ஆட்டத்தை நடத்துவதாக இருக்கும். ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்க வேண்டும் என்றால், இரு அணிகளும் குறைந்தபட்சம் தலா 5 ஓவர்களாவது பேட்டிங் செய்திருக்க வேண்டும்.
தொடர் மழை காரணமாக 5 ஓவர்கள் கூட வீச முடியாவிட்டால், போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். அப்படி நடக்கும் பட்சத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்குத் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும்.
இலங்கை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகக் கொழும்பு நகரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. போட்டி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை அன்று 65 சதவீதம் மழை பெய்யக்கூடும்.
குறிப்பாகப் போட்டி தொடங்கும் நேரமான இரவு 7 மணியளவில் மழை பெய்யும் வாய்ப்பு மிக அதிகமாக, அதாவது சில கணிப்புகளின்படி 93 சதவீதம் வரை உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவியில் கண்டு ரசிப்பார்கள். விளம்பர வருவாயும் கொட்டோ கொட்டும். போட்டி ரத்தானால் ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படும். அதேபோல, மைதானத்தில் போட்டியைக்காண டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கும் இது ஏமாற்றமாகவே முடியும். தற்போதைய நிலையில், மழை குறுக்கிடாமல் இருந்தால் மட்டுமே முழுமையான போட்டியை நாம் காண முடியும்.