கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் அனல் பறக்கும் போட்டி நாளை (பிப்ரவரி 15) கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் ஆடும் லெவனில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிரடி ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொழும்பு பிரேமதாசா மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த கவாஸ்கர், "கொழும்பு ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில், இந்திய அணி நிர்வாகம் ஒரு துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். அர்ஷ்தீப் சிங்கை அமர வைத்துவிட்டு, வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க வேண்டும். பந்துவீச்சைத் தொடங்க ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் உள்ளனர். அவர்களுக்குத் துணையாகச் சிவம் துபேவும் இருக்கிறார். எனவே இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் போதுமானது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "வாஷிங்டன் சுந்தரை சேர்ப்பது பந்துவீச்சுக்கு மட்டுமல்ல, பேட்டிங்கிற்கும் வலு சேர்க்கும். அவர் ஒரு இடதுகை பேட்ஸ்மேன். 8வது இடத்தில் களமிறங்கி அவரால் ரன்களைக் குவிக்க முடியும். இது அணிக்குக் கூடுதல் சமநிலையை ஏற்படுத்தும். ஆடுகளத்தின் தன்மையை நன்கு ஆராய்ந்த பிறகே இந்த முடிவை எடுக்க வேண்டும்" என்று கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் இந்திய வீரர்களுக்குச் சவாலாக இருப்பார் என்று பேசப்படுவது குறித்தும் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார். "இந்திய அணி ஏற்கனவே அப்ரார் அகமது போன்றவர்களை எதிர்கொண்டுள்ளது. உஸ்மான் தாரிக் புதியவர் என்றாலும், அவரைப் பயிற்சியில் பாகிஸ்தான் வீரர்களே எளிதாக எதிர்கொண்டதாகக் கேள்விப்பட்டேன்."
"அதனால் இந்திய வீரர்களுக்கு அவர் பெரிய அச்சுறுத்தலாக இருக்க மாட்டார். ஆடுகளம் அதிகமாகச் சுழன்றால் மட்டுமே எந்த ஒரு பேட்ஸ்மேனும் திணறுவார்கள். மற்றபடி இந்திய பேட்ஸ்மேன்கள் அவரைச் சமாளித்துவிடுவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.