கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2026 டி20 உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தானின் புதிய சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக், இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில், உஸ்மான் தாரிக் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவார் என முன்னாள் வீரர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் புதிய துருப்புச் சீட்டாக உருவெடுத்துள்ள உஸ்மான் தாரிக், ஒரு வலதுகை ஆஃப்-ஸ்பின்னர். சர்வதேச கிரிக்கெட்டில் இவர் பெரிய அளவில் பிரபலம் ஆகாவிட்டாலும், இவரது பந்துவீச்சு முறை மற்றும் புள்ளிவிவரங்கள் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுப்பதாக உள்ளன.
தனது முதல் நான்கு டி20 போட்டிகளிலேயே 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி ரேட் 6க்கும் குறைவாகவும், சராசரி 8க்கும் குறைவாகவும் உள்ளது. அவர் அதிக சர்வதேச போட்டிகளில் ஆடவிட்டாலும், ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு பந்துவீச்சாளரின் அச்சுறுத்தும் புள்ளிவிவரங்களை வைத்துள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தாரிக்கின் பலம் மிஸ்டரி ஸ்பின் அல்ல; அது அவரது பந்துவீச்சு பாணி. பந்துவீச ஓடிவரும்போது திடீரென ஒரு வினாடி நின்று, பின்னர் பந்தை வீசுகிறார். இந்த 'நிறுத்தி-தொடங்கும்' யுக்தி, பேட்ஸ்மேனின் கணிப்பைத் தகர்க்கிறது. நவீன டி20 கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளரின் கையை விட்டு பந்து வெளிவரும் நேரத்தைக் கணித்து, அதற்கு ஏற்றார்போல முன்கூட்டியே தங்களை நிலைநிறுத்திக் கொள்வார்கள்.
ஆனால், தாரிக்கின் இந்த வித்தியாசமான பாணி, பேட்ஸ்மேன்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, அரைமனதுடன் ஷாட் ஆட வைக்கிறது. இதனால், தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டை இழக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் தற்போதைய பேட்டிங் வரிசையில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளனர். பொதுவாக, வலதுகை ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக இடதுகை பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். பந்து பேட்டிலிருந்து விலகிச் செல்வதால், எட்ஜ் ஆகி அவுட் ஆக வாய்ப்புகள் அதிகம்.
தாரிக் போன்ற பந்துவீச்சாளர்கள், தொடர்ந்து மிடில் மற்றும் லெக் ஸ்டம்ப் லைனில் பந்துவீசும்போது, இடதுகை பேட்ஸ்மேன்கள் சற்று தாமதமாக ஷாட் ஆடினால், பந்து பேடில் படும் வாய்ப்பு அதிகம். இது எல்பிடபுள்யூ விக்கெட்டுகளுக்கு வழிவகுக்கும்.
உஸ்மான் தாரிக்கை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளித்து ஆட வேண்டும் என்பது குறித்து விமர்சகர்கள் குறிப்பிடும் சில ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
தாரிக் பந்துவீசும்போது அவர் நிற்பதைப் பார்க்காமல், அவரது கையிலிருந்து பந்து வெளிவரும் நேரத்தைக் கவனிக்க வேண்டும். அவசரப்பட்டு முன்கூட்டியே ஷாட் ஆட முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் களத்தில் தங்களின் நிலையை புத்திசாலித்தனமாக மாற்றிக்கொள்ள வேண்டும். கிரீஸின் ஆழத்தைப் பயன்படுத்தி, சற்றுப் பின்னால் நின்று பந்தை எதிர்கொண்டால், பந்து பேடில் படும் வாய்ப்பைக் குறைக்கலாம்.
தாரிக்கிற்கு எதிராக ஆரம்பத்திலேயே பவுண்டரிகளை அடிக்க முயற்சி செய்யக்கூடாது. முதல் சில பந்துகளில் ஒரு ரன் எடுப்பதில் கவனம் செலுத்தி, அவரது பந்துவீச்சு முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் சரியான வாய்ப்பு அமையும்போது மட்டுமே பெரிய ஷாட்களை ஆட வேண்டும். குறிப்பாக, 'ஸ்லாக்-ஸ்வீப்' ஷாட்டை ஆரம்பத்தில் தவிர்ப்பது நல்லது.
இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருந்தாலும், தாரிக் பந்துவீசு வரும்போது, திட்டமிட்டு ஒரு வலதுகை பேட்ஸ்மேனைக் களமிறக்குவது நல்ல பலனைத் தரும். இது அவரது பந்துவீச்சு லைன் மற்றும் ஃபீல்டிங் அமைப்பைக் குலைக்கும்.
உஸ்மான் தாரிக்கை ஒரு சாதாரண சுழற்பந்து வீச்சாளராக மாற்றினால் மட்டுமே, இந்திய பேட்ஸ்மேன்களால் ஆதிக்கம் செலுத்த முடியும். அழுத்தம் நிறைந்த இந்தப் போட்டியில், அவசரப்படாமல் நிதானமாகச் செயல்படும் அணியே வெற்றி பெறும்.